"அரசின் கொள்கையை முன்னெடுப்பதற்கு அரச ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குவது போல் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருக்கிறார்.வருமான வரித் திணைக்கள அதிகாரிகள் முகம்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக அந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். எனினும், அரச ஊழியர்களின் பங்கு அளப்பரியது. இந்நிலையில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் அரச ஊழியர்கள் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
வருமான வரி திணைக்கள ஆணையாளர் அடுத்த மாதம் 8ஆம் திகதி ஓய்வு பெற்றுச் செல்லவிருப்பதனால் அந்த வெற்றிடத்துக்கு அனுபவமிக்க ஒருவரை நியமிக்குமாறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். கடந்த வருடங்களில் நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதில் வருமான வரித் திணைக்களத்தின் பங்கு அளப்பரியதாகும்.முப்பது வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதப் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்ற வடக்கு கிழக்கு மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல அரச சேவையை கட்டியெழுப்புவதற்காக கடந்த சில வருடங்களாக அரசு பாரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
எனினும், சில தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அத்துடன், அரச திணைக்களங்களுக்கு முக்கியஸ்தர்களை நியமிக்கின்ற போது அரசு மிகவும் அவதானமாக இருப்பதுடன் நியமனம் வழங்குகின்றபோது தகுதி மற்றும் சிரேஷ்ட தன்மை கட்டாயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். என்றார்.