உலக நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கை வைத்தியர்களுக்கு சுகாதாரம் தொடர்பான சிந்தனை நிறையவே இருக்கின்றன. எனினும் அவற்றை முன்கொண்டு செல்வதில் வைத்தியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
நாடு முகம் கொடுத்துள்ள பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரத்திற்கு எதிரான யுத்தத்தை நீண்டு செல்வதற்கு விடமாட்டோம் என்று பிரதமர் ரட்ணசிறிவிக்ரம நாயக்க தெரிவித்தார்.
உடற்செயற்பாடுகளுக்கு அதிமுக்கியமான இருதயத்தை பாதுகாப்பதில் இருதய நிபுணர்களின் செயற்பாடு அத்தியாவசியமானது. அதேபோல யுத்தத்தை அரசாங்கம் நீண்டுசெல்ல விடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்றும் அவர் சொன்னார்.
இலங்கை இருதய நோய் சங்கம் மற்றும் 2007/2008 சார்க்க இருதய நோய் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்தாவது மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநாட்டில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
சார்க் அமைய நாடுகளைச்சேர்ந்த இருதய நோய் நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மாநாட்டில் உரையாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் நிபுணத்துவம் மற்றும் விசேட திறமைகொண்டவர்கள் மற்றவர்களை பேச்சின் மூலமாக வசீகரித்து கொள்வார்கள். சார்க் அமையா நாடுகளுக்கிடையில் இருதய நோய் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த சங்கம் ஆறு வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் ஆரம்பிக்கப்பட்டது.
இருதய நோய் தொடர்பாக அதிதிறமை மிக்க நிபுணர்களால் இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதையிட்டு அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது எனினும் பிரதம அதிதியான நான் இருதய நோய் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற ஒருவரல்ல. அத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்காவிடினும் உடலுக்கு இருதயம் அத்தியாவசியமானது. இருதயம் செயலிழந்து விட்டால் உடற்செயற்பாடுகள் முழுமையாகவே செயலிழந்து விடும் எனினும் இருதயத்தில் ஏற்படுகின்ற நோய் தொடர்பாக கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதற்காக உங்களால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அளப்பறியது.
ஆரோக்கியமான வாழ்விற்கும் சுகாதாரத்திற்கும் ஆரோக்கியமான இருதயம் அத்தியாவசியமானது.சில வருடங்களுக்கு முன்னர் எனக்கும் இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனையிட்டு நான் உங்களுக்கு என்றும் கடன்பட்டவனாகவே இருக்கின்றேன் இலங்கை பிரஜை சகலருக்கும் சுகாதார பாதுகாப்பை அரசாங்கம் இலவசமாகவே வழங்கிவருகின்றது. அதேபோல சார்க் அமைய நாடுகளும் இவ்விடயத்தில் அதிகளவான கரிசனையை காட்டிவருகின்றன. இலங்கையை பொறுத்தமட்டில் இலவச சுகாதாரம் மற்றும் கல்வி முறைமைகள் இருக்கின்றன பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையிலுமான கல்வி இலவசமாகவே பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.
இலவச கல்வி முறைமையின் மூலமாக இலங்கையிலிருந்து பல்வேறு துறைகளுக்கும் வைத்தியர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் இது மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் எனினும் அவ்வாறான வைத்தியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுப்பது அசாதாரணமானது மட்டுமல்ல அவர்களின் கல்விக்காக நிதியை ஒதுக்குகின்ற மக்களை பிணைக்கு வைக்கும் நடவடிக்கையாகும்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரத்திற்கு எதிரான யுத்தத்திற்கு அரசாங்கம் முகம் கொடுத்து வருகின்றது. இந்த யுத்தத்தை நீண்டு செல்வதற்கு விடமாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கை வைத்தியர்களுக்கு சுகாதார பாதுகாப்பு தொடர்பாக நிறைந்த சிந்தனை இருப்பது மட்டுமல்லாது அவற்றை பாதுகாத்து முன்னெடுத்து செல்கின்றனர்.