"இலங்கையில் அமைதி நிலவவேண்டும். இதற்காகத்தான் எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்'' என்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகள் செலுத்தி வரும் அரசியல் ஆதிக்கத்தை குறைக்கவும், எதிர்கால இளம் தலைமுறையினருக்கான புதிய அரசியல் பார்வையை வழங்கிடவும் சமீப காலமாக சிலர் முயன்று வருகின்றனர். இம்முறையும் கலை உலகத்திலிருந்து தான் அதற்கான முதல் அடி எடுத்துவைக்கப்பட்டிருக்கிறது,
கலை உலகில் தனக்கென தனிபாதையை அமைத்துக்கொண்டு வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் நடிகரான சரத்குமார், தனக்கிருக்கும் அரசியல் அறிவை பொது மக்களுக்காக பயன்படுத்தவிரும்பி" அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக மக்களிடையே தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், அண்மையில் மதுரை மாநகரில் ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது. அந்த தீர்மானம் குறித்தும், இனப்பிரச்சினையில் தங்கள் கட்சி கொண்டுள்ள நிலைபாட்டையும் பற்றி வீரகேசரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விசேட செவ்வியொன்றையளித்தார்.
கேள்வி:-இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தங்கள் கட்சி எவ்வகையான தீர்வை முன் வைக்கிறது?
எங்கள் கட்சியின் முதலாவது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் இதற்கான தீர்வை சொல்லியிருக்கிறோம். இதுவரை நோர்வே தூதுக் குழு அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. அதன் விளைவு என்ன நாம் கூறும் முன் அங்கு ஒரு அமைதிக்குழு அனுப்பபடவேண்டும். அது தான் இந்தியாவிற்கு நலனை அளிக்கக்கூடியது.
கேள்வி:- இந்த பிரச்சினையில் இந்திய அரசு எவ்வகையான நடவடிக்கையின் மேற்கொள்ளவேண்டும் என எண்ணுகிறீர்கள்? இலங்கை இனப்பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுவது தமிழகம் தான். அதனால் மாநில அரசு இதற்குரிய தீர்வையும், நடவடிக்கையும் எடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தவேண்டும். ஏனெனில் அகதிகள், ஊடுருவல், தீய சக்திகளின் ஊடுருவல் என பல சங்கடங்களை தமிழகம் தான் சந்திக்கிறது. என்னை பொறுத்தவரை இலங்கையில் அமைதி நிலவ வேண்டும். அங்கு அப்பாவி பொது மக்கள் கொல்லலப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இதற்கு உறுதியான நடவடிக்கை தேவை.
கேள்வி:- விடுதலை புலிகளின் தனி ஈழக் கோரிக்கையை தங்கள் கட்சி அங்கீகரிக்குமா?
இதற்கு கருத்து கூறும் முன் பல விடயங்களை உற்றுநோக்கவேண்டும். நாங்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள், மலேசிய தமிழர்கள், கனேடிய தமிழர்கள், புலம்பெயர்ந்தவர்கள், வம்சாவளியினர் ஆகியோர்களுடன் உணர்வால் தான் ஒன்று எனச் சொல்லுகிறோம். அதே சமயத்தில் இவ்விடயத்தில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றின் கருத்துகளுக்கு ஏற்ப தான் நாங்கள் ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கமுடியும்.செயல்படமுடியும். அவர்கள் இதற்கான கருத்தை தெரிவிக்காதவரை நாங்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியாது. ஆனால் இலங்கையில் நிலவும் அமைதியின்மையை எடுத்துகூறவும், சுட்டி காட்டடவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தவும் முடியும். இதை நாங்கள் செய்து வருகிறோம். மேலும் அங்குள்ள போராளிகளின் அமைப்பைப்பற்றி கருத்து அளவிற்கு எனக்கு ஞானம் இல்லை. அந்த இயக்கத்தினர் நடாத்தும் போராட்டத்தில் உள்ள நியாயங்கள், அரசு தரப்பு நியாயங்கள் எதுவும் நமக்கு தெரியவில்லை, எல்லாம் செய்திகளாகத்தான், ஊடகத்தின் மூலமாகத்தான் தெரிந்துகொள்கிறோம்.மேலும் இதை வைத்துத்தான் கருத்துகளையும் கூறி வருகிறோம். உண்மை நிலையை யாரும் தெரிந்து கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்.இந்த பிரச்சினை எழ காரணம், அரசியற் காரணம், பொருளாதார காரணம், ஒடுக்கப்பட்ட சூழல், இவர்களின் கோரிக்கை, அவர்கள் ஏற்றுக் கொள்ளாதது, தர மறுப்பது இதைப்பற்றி ஒரு அமைதிக்குழுவினர் இந்தியாவிலிருந்து குறிப்பாக நடுநிலையான தமிழர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று , இருதரப்பினரையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான் கண்டறிய இயலும்.
ஒரு பிரச்சினை என்றால் தொடர்புடைய இரு தரப்பினரையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நிலைபாட்டை அறிவிக்கவேண்டும். இதை விடுத்து எதையும் புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்வது என் கொள்ளை அல்ல. தமிழகத்தின் தென் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று டைட்டானியம் உரத் தொழிற்சாலை அமைப்பது சம்பந்தமாக கருத்து கூறும் முன் எங்கள் கட்சியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை அனுப்பி மக்களின் கருத்தை கேட்டறிந்த பின் தான் கருத்து கூறினேன். இந்த பிரச்சினைக்கு அமைதிக்குழு அமைப்பதன் மூலமே தீர்வு காண முடியும். அந்த குழுவில் என்னையும் சேர்த்து கொண்டால் மகிழ்ச்சியடைவேன். மொழியால், உணர்வால் ஒன்றுபட்ட நாம், அமைதியாக வாழவேண்டும் என்று எண்ணுவது சரி என்று எனக்கு பட்டது. இலங்கையில் அமைதி ஏற்பட தமிழக அரசு, இந்திய அரசு ஆகியவை ஒன்றிணைந்து நடுநிலையான சான்றோர்களை அனுப்பி, உண்மையிலையை கண்டறிந்து தீர்வு காணவேண்டும் என்று தான் எங்கள் கட்சி வலியுறுத்துகிறது.
கேள்வி:- இந்த பிரச்சினை தொடர்பாக தமிழகத்தை சார்ந்த சில அரசியல் கட்சித்தலைவர்(நெடுமாறன்,தொல்.திருமாவளவன்) களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்?
கருத்து கூறுவது எளிது. ஆனால் அந்த கருத்து மக்கள் மன்றத்தில் எடுபடவேண்டும். விவாதிக்கபட வேண்டும்.எந்த வடிவத்தில் தாங்கள் வினா எழுப்பினாலும் என்னுடைய நிலைபாடு அதுதான்," தமிழகத்திலிருந்து ஒரு அமைதிக்குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும். அங்குள்ள நிலையை கண்டறிந்த பின்னரே எங்களால் கருத்து கூறமுடியும். கருத்து என்பது தீர விசாரித்த பின் எழுவது. அதுமட்டுமல்ல இந்த விடயத்தில் ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய பணிகளை நாம் செய்ய இயலாது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு அதிகார பலம் இருந்தால் செய்து காட்டுவேன். அங்கு அமைதி ஏற்படவேண்டும் என்று உணர்வு பூர்வமாக எண்ணுபவன். பிரச்சினையை பூதாகரமாக்கி அதில் அரசியல் நடத்த விரும்பவில்லை
. கேள்வி:- இத் தூதுக் குழுவில் யார்யார் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
நிபுணர்கள், முகம் தெரிந்த கலைஞர்கள், உணர்வுள்ளவர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் இடம்பெறவேண்டும். ஒடுக்கப்படடார்களா? அடக்கப்பட்டார்களா? உரிமை மறுக்கப்பட்டதேன்? பேச்சு வார்த்தை ஏன் வெற்றிபெறவில்லை? உடன்பாடு நிறைவேற்றுவதில் என்ன இடர்பாடு? என அனைத்து அம்சங்கள் குறித்து இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும். ஏனெனில் என்னை பொறுத்தவரை இலங்கை அண்டை நாடு மட்டுமல்ல அனைத்து வளங்களையும் கொண்ட பூமி. அங்கு அமைதி நிலவவேண்டும் என்று விரும்புகிறேன். கேள்வி:- நீங்கள் விரும்புகிற தூதுக்குழுவின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
முதலில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு அதற்கு ஒப்புதல் தரவேண்டும். அதன்பின் இலங்கை அரசின் ஒப்புதலும் பாதுகாப்பும் வழங்க வேண்டும். இது ஒரு முயற்சிதான். இவை நடைப்பெற்றவுடன்அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கிறேன்.
கேள்வி:- இந்த விடயத்தில் இந்திய அரசு தலையிடாததால் தான் நோர்வே போன்ற மேற்குலக நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதா?
இந்திய அரசு தலையிடுவதை ஒரு தலைபட்சமாக இருக்கிறது என்று இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் நோர்வே நாடு அமைதிக்கான முயற்சியில் ஈடுபட்டதாக அறிந்தேன். ஆனால் இந்தியா தான் முடிவெடுக்கவேண்டும். ஏனெனில் இந்த பிரச்சினையில் நேரடியாக பாதிக்கப்படுவது நோர்வே அல்ல இந்தியா தான்.
தமிழர் தமிழர் என்று ஓயாமல் கூறுகிற கலைஞர் கருணாநிதி, இப்பிரச்சினையில் தயக்கம் காட்டுவதும், சுணக்கம் காட்டுவதும் ஏன் என்று புரியவில்லை. ஒரு சமயத்தில் ஆதரவாக பேசுகிறார் என்று பார்த்தால், நான் ஆதரவாக பேசவில்லை என்று அவரே மறுத்துவிடுகிறார். ஏன் இந்த முரண்பாடு? மற்றவர்கள் உணர்வின் அடிப்படையில் பேசுகிறவர்கள். ஆனால் நானோ இந்த பிரச்சினையை பற்றி ஆழமாக சிந்தித்து பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதன் முதற்கட்டமாக ஒரு அமைதிக்குழுவை அனுப்புங்கள் என்று கோருகிறேன்.
கேள்வி:- தற்போது தாங்கள் எடுத்திருக்கும் நிலைபாடு குறித்து இந்திய பாராளுமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினராக இருந்தபோது வலியுறுத்தவில்லையே ஏன்?
நான் உறுப்பினராக இருந்த சமயத்தில் இலங்கை இனப்பிரச்சினை குறித்து அவையில் விவாதிக்கப்படவில்லை. மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக குரல் எழுப்ப இயலாது என்ற ஒரு நிலையும் இருந்தது. இதனால் தான் நான் அப்போது பேசவில்லை.
கேள்வி:- சேது சமுத்திர திட்டத்தை இலங்கை அரசு தான் சதி செய்து தடுத்து நிறுத்துவதாக சில இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியானதை குறித்து தங்களின் கருத்து என்ன?
என்னைப் பொறுத்தவரை இந்த குற்றசாட்டு அடிப்படையற்றது. மேலும் சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாகவும் செய்திகளை வெளியிட்டிருக்கலாம்.எனவே வெளியான அந்த செய்தி குறித்து முழுமையாக தெரிந்தகொண்டபின் பதிலளிக்கிறேன்.
கேள்வி:- கச்சத்தீவை ஒட்டி உள்ள கடல் பகுதி முழுவதும் இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்கவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறது என்கிறார்களே! இது குறித்து தங்களின் கருத்து என்ன?
இந்த நிலை குறித்து தனி மனிதன் என்ன கருத்து கூறமுடியும்.மேலும் இது குறித்து கருத்து கூற நான் ஒன்றும் தமிழக முதல்வரோ அல்லது அதிகார பலம் உள்ள மத்திய அமைச்சரோ இல்லை. என்னை பொறுத்தவரை தனது கட்டுப்பாட்டிற்குள் உள்ள சர்வதேச கடல் எல்லை பகுதியில் இலங்கை அரசு எடுத்திருக்கும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. இதனால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களுக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவேண்டியது தமிழக அரசும், இந்திய அரசும் தான்.
கேள்வி:-இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களை காக்க இந்திய அரசு மற்றும் தமிழக அரசு எந்த வகையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்? தமிழக மீனவர்கள் நம் கடல் எல்லையை தாண்டி சென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற எண்ணத்தை மீனவர்களிடம் ஏற்படுத்தவேண்டும். அதை மீறி செல்பவர்களை தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டேயிருக்கவேண்டும்.
கேள்வி:-நடிகர்கள் தொடங்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ஒரு பிரபல அரசியல் கட்சியின் தலைவர் ஒரு செவ்வியில் கூறியிருக்கிறாரே, இவற்றை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை தொடங்கலாம். மருத்துவர் தான் தொடங்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்படவில்லை. மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் எவரும் கட்சி தொடங்கலாம்.
கேள்வி:-இலங்கை இனப்பிரச்சினையில் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளை தலைமையாக கொண்ட இந்திய அரசு சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று கருதுகிறீர்களா?
இந்த விடயத்தில் சரியான நடவடிக்கையை எடுக்குமாறு தமிழக அரசு தான் இந்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். ஏனெனில் இதனால் ஏற்படும் பாதிப்பு தமிழக அரசுக்குத்தான் அதிகம். இங்குள்ள தலைவர்கள் இந்த பிரச்சினையை அரசியலாக்காமல் உண்மையான மொழி மற்றும் இன உணர்வுடன் நடந்து தீர்வு காண முயலவேண்டும்."" தமிழ் வாழ வேண்டும், தமிழர் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொள்கிற தமிழக முதல்வர் கலைஞர், தான் ஆட்சியில் இருக்கின்ற காலத்திவேயே இதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்றும் , இதற்கான பெருமையை தாங்கள் அடைய வேண்டும்'' என்று அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
கேள்வி:- இலங்கை இனப்பிரச்சினையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் கையாண்ட அணுகுமுறையும், மற்றவர்கள் கையாளும் முறைக்கும் ஏதேனும் வேறுபாட்டை உணர்கிறீர்களா?
வேறுபாடு, முரண்பாடு, ஒற்றுமை இவைகளைப்பற்றி பேச விரும்பவில்லை. ஏனெனில் நான் நீதிபதியல்ல. எனக்கு இலங்கையில் அமைதி நிலவ வேண்டும். அதற்கு அணுகுமுறையை ஒப்பிடுவதை விட அமைதி தான் முக்கியம். அதற்காக எப்படி செயல்பட வேண்டும்? அதற்கான செயல்திட்டத்தை எப்படி வடிவமைப்பது? இதற்காக ஒரு தூதுக் குழுவை அங்கு அனுப்புங்கள்.மேலும் இந்த பிரச்சினையில் தற்போது ஆளும் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தமிழக அரசு, இந்திய அரசை நிர்ப்பந்திக்கமுடியும். அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள்? தமிழக அரசு இந்த பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து இந்திய அரசை வற்புறுத்தினால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.