சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இந்தியா சுயநலத்துடன் செயற்படுகின்ற போதும் அதனை எதிர்க்கத் தேவையில்லை என்று ஜே.வி.பி.யினருக்கு சிங்கள எழுத்தாளரான ஜெகான் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
டெய்லி மிரர் ஆங்கில ஏட்டில் ஜெகான் பெரேரா எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:
மகிந்தவிற்கும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான அண்மைய சந்திப்பு, நாடு எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் என நாட்டின் பிரதான கட்சிகளின் மீது நம்பிக்கை கொண்டோர் கருதினர்.
வடக்கில் தற்போது முன்னெடுக்கப்படும் போரினால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பலியாகியிருப்பதுடன், பல்லாயிரக்ககணக்காணோர் அகதிகளாகியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்களும் ஒவ்வொரு பிரதான காரணி குறித்தே அதிக கவனம் செலுத்தினர்.
ஒருவர் 13 ஆவது திருத்தம் பற்றியும் மற்றையவர் 17 ஆவது திருத்தம் பற்றியும் அதிக கரிசனை காட்டினர்.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மகிந்தவால் நியமிக்கப்பட்ட அனைத்து கட்சிக் குழுவினரின் பரிந்துரைகள் காரணமாக 13 ஆவது திருத்தம் திடீரென புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மாகாண சபைகளின் ஊடாக அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எனினும், நாட்டின் எந்தவொரு மாகாணத்திலும் இந்த திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. குறிப்பாக போர்க்கள முனைகளாக வர்ணிக்கப்படும் வடக்கு-கிழக்கில் 13 ஆவது திருத்தம் அமுலுக்கு கொண்டு வரப்படவில்லை.
மறுபுறத்தில் 17 ஆவது திருத்தம் 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் பிரதான நிறுவனங்களில் அரசியல் நியமனங்களை தடுக்கும் நோக்கில் இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. பொதுத்துறை, காவல்துறை மற்றம் நீதி போன்ற துறைகளை மேற்கோள் காட்டலாம். நாட்டில் நல்லாட்சி குறித்த நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாக குறையும் வகையில் 17 ஆவது திருத்தமும் கடந்த நான்கு வருடங்களாக அமுல்படுத்தப்படவில்லை.
இந்த நிலைமையின் கீழ், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுத்தல் மற்றும் நல்லாட்சி என்பவற்றுக்காக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பிரதான கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் கூடிய அரசியல் அணுகுமுறையை வரவேற்பர்.
உண்மையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த அணுகுமுறைக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
எனினும், யதார்த்த நிலைமைக்கு புறம்பான பாதையில் செல்லும் மக்கள் விடுதலை முன்னணியினர் மட்டுமே இதற்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மகிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையிலான சந்திப்பிற்கு இந்திய அரசாங்கத்தின் அழுத்தமே காரணம் எனவும், இதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்தின் சுயநலம் மறைந்திருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இராணுவ முன்நகர்வுகளில் அதிக அக்கறை காட்டி வரும் அரசாங்கத்திற்கு நாள்தோறும் அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்வது தொடர்பான அழுத்தம் அதிகரித்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிடும் அனைத்து அனைத்துலக நாடுகளும் அரசியல் தீர்வு மூலம் தமிழ்ச் சிறுபான்மையினருக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பததையும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனையுமே வலியுறுத்தி வருகின்றன.
அநேகமான நட்பு நாடுகள் சிறிலங்காவின் அனைத்து சமூகங்களினதும் மனித உரிமைகள் உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றே கருதுகின்றன.
அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் மிக அதிகமாக உணரப்படுகிறது.
ஐரோப்பிய சந்தையில் பொது முன்னுரிமை திட்ட வரப்பிரசாதத்தை தக்க வைத்துக்கொள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்கள் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.
கொசோவோ சவால்கள்
கொசோவோவின் ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனமும் அதனைத் தொடர்ந்து பலம் பொருந்திய மேற்குலக நாடுகள் அதனை அங்கீகரித்தமையும் இலங்கைப் பிரச்சினையில் குறிப்பிடக்கூடியளவு தாக்கங்களையும், விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைமையின் கீழ் பல்வேறு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
ஒரு தரப்பிற்கு அதிகாரம் பகிரப்படுவதன் மூலம் பிரிவினைவாதத்திற்கு உந்துதல் அளிப்பதாக அமைந்து விடும். இதனால் குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு அதிகாரமளிக்கப்படக்கூடாது. இதனையே மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்துவதாக தோன்றுகிறது.
இன அல்லது பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வின் மூலம் பிரிவினைவாதம் சக்தியடையும், விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத போராட்டத்தின் காரணமாக வடக்கின் குறிப்பிடத்தக்கதொரு பகுதி அவர்களின் ஆயுதக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
அரசாங்கமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி, மேற்குலகத்தின் நிலைப்பாடு குறித்து கடும் போக்குடைய அணுகுமுறையையே கையாள்கின்றனர்.
நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து குறைந்தளவு கவனம் செலுத்தும் நாடுகளுடனான தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே அவர்கள் குரல் கொடுக்கின்றனர்.
மறுபுறத்தில், அனைத்துலக சமூகம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் மேலும் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் என்பதே அரசியல் தந்திரோபாய வல்லுநர்களின் கருத்தாக அமைகிறது.
ஜெனீவாவின் சிறிலங்காவின் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க அண்மையில் வெளியிட்ட கட்டுரையொன்றில் சிறிலங்கா அரசாங்கத்தின் அணுகுமுறைகள் பற்றி விமர்சித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் அனைத்துலக சமூகம் என்பவை தொடர்பாக சமநிலையான அணுகுமுறையைப் பேணுவதில் அரசாங்கம் அதிக கரிசனை காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை- ஆசிய அமைவிடத்தை மையமாக வைத்து அனைத்துலக சமூகத்தின் தலையீடுகளுக்கு எதிராக செயற்பட முடியும்.
எனினும், முழு உலகத்திலிருந்து விலகிச் செயல்பட முடியாது. சில சக்திகளுக்கு எதிராக மற்றைய சக்திகளை திருப்திபடுத்தும் கொள்கைகளை சிறிலங்காவினால் தவிர்க்க முடியாது என்பதே தயான் ஜயதிலக்கவின் நிலைப்பாடாகும்.
உள்நாட்டு மக்களின் அதிருப்தி, வெறுப்பு, புறச்சக்திகளின் புறக்கணிப்பு மற்றும் எல்லைப்புற தலையீடுகள் தமிழீழத்தை உருவாக்குவதற்கும், அங்கீகரிப்பதற்குமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் என்று அவர் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தமது கட்டுரையில் சுயாட்சிக்கு சார்பான பல வாதங்களை முன்வைத்துள்ளார். ஒரே நாட்டுக்குள் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் விதந்துரைத்துள்ளார்.
சேர்பிய அதிபர் மிலொசொவிக், சுயாட்சியை மறுதலித்ததன் மூலமே கொசோவோ சுதந்திரப் போராட்டம் உக்கிரமடைந்ததாக அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
தற்போது இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே அதிகாரப் பகிர்வு தொடர்பான திட்டம் நிலைத்திருக்கின்றது. ஒரு சில சிவில் அமைப்புக்களைத் தவிர அதிகாரப் பகிர்வு தொடர்பான கரிசனையுடன் நோக்கக்கூடிய அரசியல் பின்புலம் வெகுவாக குறைந்திருக்கிறது.
இந்த நிலைமையின் கீழ் இந்தியாவின் பங்களிப்பு காத்திரமானதொன்றாகவே கருதப்படுகிறது. நடைமுறைச் சாத்தியப்பாடுடைய அதிகாரப்பகிர்வு திட்டமொன்றை முன்வைத்தல் மற்றும் அமுலாக்கல் என்பன தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக அழுத்தங் கொடுத்து வந்தது.
13 ஆவது திருத்தத்தின் மூலம் ஒரே இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.
இந்தியாவின் கரிசனை
ஒரு கட்டத்தில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்தியா காணப்பட்டதனையே அனேகமான இலங்கையர்களின் மனதில் இன்றும் நினைவில் உள்ளது. எனினும், தமிழ்ப் பிரிவினைவாதத்தினை எதிர்க்கும் பிரதான சக்தியாகவே இந்தியா காணப்படுகிறது.
இது ஒருவகையில் இந்தியாவின் சுயநலமாகவே நோக்கப்படுகிறது. உண்மையில் இந்திய ஒருமைப்பாடு தொடர்பான கரிசனையாகவே இந்த நிலைமை நோக்கப்படுகிறது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு காஷ்மீர் பகுதிகளில் நிலவி வரும் பிரிவினைவாதப் போராட்டம் மற்றும் பஞ்சாப், இலங்கைக்கு மிக அண்மித்த தமிழக மாநிலம் என்பவற்றில் நிலவி வந்த பிரிவினைவாத போராட்டங்களைக் குறிப்பிடலாம்.
அண்மைய கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
கொசோவோ தொடர்பான சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் நிலைப்பாடு குறித்து உலக அளவில் பேசப்பட்டது. இந்த நிலைமை இந்தியாவிற்கு சற்று அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.
பல்லின மக்களை அதிகமாக கொண்டிருக்கும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு இந்த நிலைமை ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.
20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியாவில் இன ரீதியான தேசியவாதத்தினால் உருப்பெற்ற கிளர்ச்சிகளே இரண்டு உலக மகா போர்கள் வெடிக்க வித்திட்டது என்பதனை உலக வரலாறு அறிந்த எவரும் மறுப்பதற்கு இல்லை.
கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் தமது எல்லைகளை மாற்றியமைத்துக்கொண்டன. ஓவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட ஓரு பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான அமைப்பு முறைமையொன்று உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட நாடுகளில் சிறுபான்மை இனங்களும் வசித்து வந்தன.
சோவியத் யூனியன் மற்றும் யுகோஸ்லோவிய நாடுகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கடும் போக்குடைய தேசிய வாதத்தின் காரணமாக வெடித்த கிளர்ச்சிகள் ஏனைய நாடுகளுக்கும் ஒரு உந்துசக்தியாக அமைந்ததாக மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் தலையீடு தொடர்பான எதிர்ப்பிற்கு உண்மையில் அனைத்துலக அரசியல் தொடர்பான பிழையான கருதுகோளே காரணமாகும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்திய அரசாங்கம் சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பதில் அதிக கரிசனை காட்டுகின்றது.
1970-களின் கடைக்கூற்றிலிருந்து 1987 ஆம் ஆண்டு இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் முன்னெடுக்கப்படும் காலம் வரையில் தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் இந்தியாவே வழங்கியது என்பது சிலருக்கு ஞாபகமிருக்காது.
இந்த நிலைமைகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழ்ப் போராளிகள் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இலங்கையின் பொருளாதாரத்திற்கும், உயிர்களுக்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
மறுபுறத்தில், இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்தியாவின் பிழையான அனுகுமுறையின் காரணமாக 1987-1991 ஆம் ஆண்டு வரை 1,000-க்கும் மேற்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் உயிர்களை தியாகம் செய்ய நேரிட்டது.
இந்த நிலைமையின் கீழ் இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் அதிக சிரத்தை காட்டப்பட வேண்டும் என்பதே தற்போதைய யதார்த்தமாகும் என ஜெகான் பெரேரா தமது கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.