இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து இலங்கை இந்திய இராணுவத் தளபதிகள் நேற்று முன்தினம் கூடி விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர்.
இந்தியாவிற்கு ஒருவார கால விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் அந்த நாட்டின் இராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூரிற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றது.
இந்தச் சந்திப்புப் பற்றிய முழுமையான விவரங்கள் வெளியிடப்படாத போதிலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமீபத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்திய இராணுவத் தளபதி முழுமையாகக் கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து மேலும் ஒத்துழைப்பை இலங்கை இராணுவத் தளபதி கோரியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் உறவு சரியான பாதையில் உள்ளது என்றும், பாதுகாப்புப் படையினர் தமக்கிடையேயான உறவுகளைப் பலப்படுத்த வேண்டிய தருணம் இது என்றும் இலங்கை இராணுவத் தளபதி இந்தச் சந்திப்பின் பின்னர் தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கைக்காகத் தனது இராணுவத்தை நவீனமயப்படுத்த முனைந்திருக்கும் இலங்கைக்கு, புதுடில்லி பேரழிவை ஏற்படுத்தாத ஆயுதங்களையே வழங்கி வருகின்றது என்று கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் வலுவிடங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இலங்கை இராணுவத்திற்கு மேலும் விமானங்கள் தேவைப்படுகின்றன என்று செய்தி ஏஜென்ஸிகள் குறிப்பிடுகின்றன.
இந்தியா குறிப்பிட்ட வகை ஆயுதங்கள் சிலவற்றை வழங்க மறுத்ததைத் தொடர்ந்து "ராடர் கண்காணிப்பு சாதனங்கள் போன்றவற்றை சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து பெறுவதற்கான முயற்சியை இலங்கை மேற்கொண்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, இலங்கையில் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு இலங்கைத் தரப்பிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.