பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேசமயம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டும் தன்மையற்ற விதத்தில் ஆபிரிக்க, ஆசியா மற்றும் ஐ.நா. விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரிட்டிஷ் அமைச்சர் மார்க் மல்லோ பிரவுணின் அறிக்கை அமைந்திருப்பதையிட்டு இலங்கை கவலையடைந்திருப்பதாக மனித உரிமைகள், இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் ஏழாவது அமர்வில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க, பிரிட்டிஷ் அமைச்சர் பிரவுண் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை காலை பதிலளித்திருக்கிறார்.
இது தொடர்பாக அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது;
ஐக்கிய இராச்சியத்தின் ஆபிரிக்கா, ஆசியா, ஐ.நா. விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரினால் தவறான முறையில் உள்வாங்கப்பட்ட அணுகுமுறையையிட்டு இலங்கை கவலையடைகின்றது. சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் கரிசனைகளை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். அவை எமக்கு அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. ஆனால், சில தனிப்பட்டவர்கள் இதனைக் கடினமான விடயமாகக் கருதுகின்றனர்.
இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் துரதிர்ஷ்டவசமானவையென பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு மேற்கோள்காட்டுவதற்கு மல்லோ பிரவுண் பிரபு இடமளித்துள்ளமை கவலைக்குரியதாகும். இது தொடர்பாக பிரிட்டனிலுள்ள எமது உயர்ஸ்தானிகர் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தும் அந்த அறிக்கை தொடர்பாக இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவையிருப்பதாக இன்று மேன்மைதங்கிய பிரபு உறுதிபடக் கூறினார். ஜனநாயகத்தை நீண்டகாலமாக நடைமுறைப்படுத்திவரும் இலங்கை இதனை நன்கறியும். காலனித்துவ பாரம்பரியத்தில் நடைமுறைப்படுத்தாத இந்த விடயத்தை அதாவது மனித உரிமைகள் தொடர்பான பல நிறுவனங்களை இலங்கை பல வருடங்களாக மேம்படுத்தி வருகின்றது. பயங்கரவாதத்தை கையாளும்போது பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதை தவிர்த்துள்ளது குறித்து எமது பதிவுகள் தொடர்பாக நாம் பெருமை கொள்கிறோம். பயங்கரவாதத்தை கையாளும் ஏனைய நாடுகள் போன்றில்லாமல் எமது நாட்டின் நிலைவரத்தையிட்டு பிரவுண் மறந்துவிட்டிருப்பாரென நாம் கருதுகின்றோம்.
இலங்கை அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டுக்கு முரணானதாக இலங்கையில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை அமைப்பதற்கான முயற்சிகளுக்கு பிரவுண் பிரபு ஆதரவளித்துள்ளார். இதற்குப் பதிலாக பயங்கரவாதத்திற்கு எதிரான உண்மையான போராட்டம் தொடர்பாக எமது சகல பிரஜைகளினதும் மனித உரிமைகள் குறித்து இதய சுத்தியுடனான கரிசனையை முன்வைப்பது அதிகளவுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.