மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாராவது வாக்களிக்குமாறு நிர்பந்தம் செய்தால் புத்திசாதுர்யமாகச் செயற்பட்டு வாக்குகளை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா நேற்று வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முன் எப்போதும் இல்லாதவாறு பெரும் நெருக்கடியானதொரு சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரம் மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுத் திணித்துள்ளது.
இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்பது உங்களுக்கு நன்கு தெரிந்ததே.
வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகத்தைத் துண்டாடி, தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களை அபகரித்து, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, எமது பாரம்பரிய பூர்வீகப் பிரதேசத்தைச் சூறையாடும் சதிமுயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகச் செயற்படுகின்றது.
அது மட்டுமல்ல, இத்தகைய தேர்தல்களின் மூலம் எங்கள் சொந்தப் பூமியிலேயே எம்மைப் பலவீனப்படுத்தி, அரசியல் அதிகாரத்தைப் பறித்து விடவும் அரசாங்கம் கங்கணங்கட்டி நிற்கின்றது.
தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, பேரினவாத போர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இராணுவ நடவடிக்கை மூலம் தமிழ்த் தேசிய இனத்தைப் பூண்டோடு அழிக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கத்தில் பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயங்களைக் கண்டு இந்த அரசாங்கத்தினை விட்டு வெளியேறி நிற்கின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த அரசின் தீய செயற்பாடுகளுக்கும், அரசாங்கத்தின் ஆதிக்கத்தை எம் மண்ணில் நிலைநாட்டுவதற்கும் இக்குழுக்கள் துணை போகின்றன. எனவே அரசாங்கத்திற்கு உறுதுணையாக நிற்கும் அடிவருடிக் கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் உங்கள் வாக்குகளைப் பயன்படுத்த முன்வர மாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.
இவ்வாறான சூழலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவிருக்கும் மாநகர, பிரதேச சபைத் தேர்தல்களின் போது அவதானமாகவும் நிதானமாகவும், புத்திசாதுரியமாகவும் சிந்தித்து, சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் துணை போகின்ற கட்சிகளுக்கோ குழுக்களுக்கோ அல்லது அரசாங்கத் தரப்புக்கட்சிக்கோ தானும் உங்கள் வாக்குகள் சேராமலும், மற்றவர் உங்கள் வாக்குகளைப் பயன்படுத்த இடமளிக்காமலும் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடனும் உரிமையுடனும் வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் மாறாக நிர்ப்பந்திக்கப்படுவீர்களாயின் அச்சூழ்நிலையில் மாற்றாருக்கு உங்கள் வாக்குகள் சென்றடையாமல் செல்லுபடியற்றதாக்க பின்னிற்க மாட்டீர்கள் என்றும் நம்புகின்றோம்.
மாற்றாருக்கு மண்டியிடாத மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கொள்கைக்காக விடுதலைப்பற்றுடனும் சுதந்திர இலட்சியத்துடனும் தேர்தல் களத்திலும் சரி, போராட்டக் களத்திலும் சரி அர்ப்பணித்து நின்ற தன்மானத் தமிழர்கள். அதனை மீண்டும் ஒரு தடவை நிரூபித்து நிற்போம். நம் தேச மக்களுக்கும் அனைத்துலகத்திற்கும் இச்செய்தியை உரக்கச் சொல்வோம். உணரச் செய்வோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.