சிறிலங்கா அரசியலில் மிக முக்கிய புள்ளி ஒருவர் மரணமடைந்து விட்டதாக தவறுதலாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அரசு வெளியிட இருந்து இரங்கல் அறிக்கை அதிர்ஸ்டவசமாக இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
மகிந்த ராஜபக்ச பலஸ்தீனத்திற்கு ஆதரவு தரும் சிறிலங்காவின் பிரதிநிதிகளுடன் மிக முக்கிய கூட்டமொன்றில் ஈடுபட்டிருந்தார். சிறிலங்கா அரசு இஸ்ரேலுக்கு அதிகாரிகளை அனுப்பியது தொடாபாக அவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இஸ்ரேலுக்கு பயணம் செய்யப் போவதில்லை என்று மகிந்த அவர்களுக்கு தெரிவித்திருந்த போதும், சிறிலங்காப் பிரதமர் தலமையிலான குழு இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது.
அப்போது அரச தலைவரின் உதவியாளர் மகிந்தவிடம் குறிப்பு ஒன்றை சமர்ப்பித்தார். அதன் பின்னர் மகிந்தவின் முகம் மாறிவிட்டது. பின்னர் முக்கிய பிரமுகர் இறந்துவிட்ட செய்தியை மகிந்த எல்லோருக்கும் தெரிவித்தார். பின்னர் எல்லோரும் எழுந்து இரு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தினர்.
அந்த முக்கிய பிரமுகரின் சேவை தொடர்பான இரங்கல் அறிக்கை ஒன்றும் அரசினால் தயாரிக்கப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் மற்றுமொரு குறிப்பு மகிந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தக் குறிப்பில் இறந்து விட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட முக்கிய பிரமுகர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் உடனடியாக அரசினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை கிழித்து எறியப்பட்டதுடன் அரசு மிகப்பெரும் அவமானத்தில் இருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.