தமிழ்நாட்டின் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த 6 தளபதிகளை இந்திய அரசு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் தமிழின உணர்வாளர்கள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியுள்ளனர்.
சிறிலங்காப் படையின் இணைத் தளபதி ரத்திநாயக்க, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எல்.பெர்னாண்டோ, கடற்படையின் ரியர் அட்மிரல் தெனோனி, வான்படையின் பி.பி.பிரேமசந்திர உள்ளிட்ட 6 பேர் வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் இந்தச் செயலைக் கண்டித்து கோவை லயன்ஸ் கிளப் அருகே இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் ஒன்றுதிரண்டு எழுச்சிமிக்க கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்திருந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில்
பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், ஆறுச்சாமி, திருப்பூர் துரைசாமி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலையரசன்
புரட்சிகர இளைஞர் முன்னணியின் முகிலன்,
தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் தனசேகரன்,
ஆதித் தமிழர் பேரவையின் நந்தன்,
மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முத்தமிழ் செல்வன், லோக் ஜனசக்தியின் குப்புராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசாங்கத்தின் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும் இனப்படுகொலை நடத்தும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவியை இந்தியா வழங்குவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.