இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா மிக மோசமான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சாடியுள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு நேற்று வியாழக்கிழமை (13.03.08) அவர் வழங்கிய நேர்காணலின் எழுத்து வடிவம்:
கெடுபிடி நிறைந்த மதவாச்சி சோதனைச் சாவடி
வன்னியில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (11.03.08) நாங்கள் கொழும்பை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த போது மதவாச்சியில் சிறிலங்காவின் காவல்துறையினரும், படையினரும் எங்களை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கினர்.
மதவாச்சியில் தற்போது புதிதாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு சோதனைக் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் ஏற்கனவே காவல்துறை மா அதிபர் மற்றும் அந்த சோதனைச் சாவடிக்கு பொறுப்பான அனுராதபுரத்தில் இருக்கும் பிரதி காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்துவிட்டே "மாமனிதர்" சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தோம்.
பாரிய சோதனைக் கெடுபிடுகளுக்கு நாங்கள் உள்ளாக்கப்படுவோம் என்பதனை ஏற்கனவே தெரிந்திருந்தபடியால்தான் இத்தகைய ஏற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம். எனினும் "மாமனிதர்" சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது மதவாச்சி சோதனைச் சாவடியில் பாரிய சோதனைக் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டோம்.
எமது வாகனங்கள் கடுமையாகச் சோதனையிடப்பட்டதுடன் நாங்கள் கொண்டுவந்த பொதிகள் முழுமையாக இறக்கப்பட்டு அதற்குள் இருந்த எமது ஆடைகளை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டது.
அது மட்டுமின்றி எங்களின் வாகனங்கள் அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றப்பட்டு வாகனத்தின் கதவுப் பகுதிகள், இருக்கைகளின் கீழ்ப் பகுதிகள், வாகனத்தின் கீழ்ப்பாகம் என்பன முற்றுமுழுதாகக் கழற்றப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதற்கு நாங்கள் அந்த இடத்திலேயே எங்களின் வன்மையான கண்டனத்தை தெரிவித்தோம். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், "மாமனிதர்" சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு வருகின்றோம், ஏற்கனவே நாங்கள் எங்களின் பயணம் குறித்து அறிவித்துவிட்டே திரும்பி வருகின்றோம், அப்படியிருந்தும் எமது சிறப்புரிமையை மீறும் வகையில் நடைபெறும் சோதனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் தெரிவித்தோம். ஆனால் அங்கிருந்த பொறுப்பதிகாரி "இது மேலிடத்து உத்தரவு, ஆகவே என்னை மன்னித்து விடுங்கள்" என்று எங்களிடம் கூறினார். உங்களை கடுமையாகச் சோதனையிடுமாறு மேலிடத்தில் இருந்து எனக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு தான் ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறி அவர் நழுவிட்டார்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத சிறிலங்காவின் படையினரும், காவல்துறையினரும் முழுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வாகனத்தின் பாகங்கள் கழற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமின்றி அதற்குப் பின்னர் ஸ்கானர் போன்றதொரு கருவியைக் கொண்டு வந்து வாகனங்களின் பல பாகங்களிலும் அதனை வைத்து குண்டுகள் இருக்கின்றதா என்று அவதானித்தார்கள்.
அதற்குப் பின்னர் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு, மோப்ப நாயின் உதவியுடனும் தேடுதல் நடத்தப்பட்டது.
இதனை ஒரு மிகவும் மோசமான நடவடிக்கையாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோதனையிடப்பட்டால் பொதுமக்கள் எவ்வாறு சோதனையிடப்படுவார்கள் என்பதனை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
மிகவும் கெடுபிடி நிறைந்ததொரு சோதனைச் சாவடியாகவும், பொதுமக்களை இம்சைப்படுத்துகின்றதொரு சோதனைச் சாவடியாகவும் மதவாச்சி சோதனைச் சாவடி உள்ளது.
குறைந்தது ஒவ்வொருவரின் வாகனங்களும் ஒவ்வொரு மணித்தியாலம் சோதனைக்குட்படுத்தபட்டது. ஒரே நேரத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் சோதனையிடப்பட்டாலும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த சோதனைச் சாவடியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தப்பட்டோம்.
நிச்சயமாக, வேண்டும் என்றே செய்யப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையாகத்தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.
ஏன் என்று சொன்னால் நாங்கள் கிளிநொச்சிக்கு சென்றிருப்பதும் மீண்டும் திரும்பி வருவதும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் படையினருக்கும் தெரியும். ஆகவே எங்களை அந்த சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி எங்களுக்கு துன்பங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனைகள் மூலம் "நீங்கள் வேறு நாடு, நாங்கள் வேறு நாடு" என்ற செய்தியைத்தான் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
எங்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு எடுத்துக் கூறவிருக்கிறோம். அனைத்துலக தூதரகங்களுக்கும் இந்த விடயத்தை எடுத்துச் செல்லவிருக்கிறோம். எப்படியிருப்பினும் நாங்கள் எமது சிறப்புரிமை பிரச்சினையை வெளியில் சொல்ல முடியுமே தவிர, சிறிலங்கா அரசாங்கம் நிச்சயமாக இதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை.
எதிர்காலத்தில் இத்தகைய கெடுபிடிகள் இன்னமும் இறுக்கமடையக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே எங்களின் பாதுகாப்பை நாங்களே தேடிக்கொள்ள வேண்டிய, எங்களின் இருப்பை நாங்களே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை எங்களது கரங்களில்தான் தங்கியுள்ளது.
வன்னியில் பொருளாதாரத் தடை
வன்னிப் பிரதேசத்தில் இன்று மக்கள் பாரிய உணவுப் பிரச்சினை, மருந்துப் பிரச்சினை, எரிபொருள் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்க அடிப்படை வசிதிகள் குறைந்த நிலையிலும் பாடப்புத்தகங்கள் இன்றியும் மாணவர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.
கொழும்பில் இருந்து வன்னிக்கு அனுப்பபட்ட மிகக்குறைவான பொருட்கள் வவுனியாவில் தேங்கிக் கிடக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட தொகை உணவுப்பொருட்களும், மருந்துப் பொருட்களும் அங்கு தேங்கிக் கிடக்கின்றன.
தேங்கிக் கிடப்பவை வன்னிப் பிரதேசத்திற்கான முற்று முழுதான தேவையும் நிறைவேற்றக் கூடியதல்ல.
இத்தகைய பல்வேறு பிரச்சினைக்குள் இன்று வன்னிப்பிரதேச மக்கள் உள்ளனர். பொருளாதாரத் தடை என அறிவிக்கப்படா விடினும் அங்கு பாரியதொரு பொருளாதாரத் தடையுடனேயே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய பொருளாதராத் தடைக்கு மத்தியிலும் அந்த மக்கள் ஒரு துணிவுடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் வன்னியில் பொது அமைப்புக்கள் செயற்பட முடியாதளவுக்கு சிறிலங்கா அரசு தடைகளை விதித்திருக்கிறது.
இருந்தாலும் தங்களின் தேசம் மிக விரைவில் விடிவு பெறும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அத்தகையதொரு விடிவு பெறும்போது தான் தங்களின் வாழ்வும் வளம்பெறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.
அதுமட்டுமின்றி வான்குண்டுகள் அனைத்தும் விடுதலைப் புலிகள் மீதே வீசப்படுகின்றன என்று சிறிலங்கா அரசாங்கம் பரப்புரை செய்து கொண்டிருந்தாலும் உண்மையில் அந்த குண்டுவீச்சுகள் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீதே வீழ்கின்றன.
அதன் காரணமாகவும் மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். எனினும் வானில் வானூர்திகள் பறக்கும்போது மக்கள் ஏதோவொரு வகையில் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்ற நிலையில் நிலக் காப்பரண்களுக்குள் மறைகின்றதையும் நாங்கள் காணக்கூடியதாகவிருந்தது.
வன்னியில் வாழும் மக்களுக்காக புலம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ந்தும் உழைக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் போராட்டத்திற்காக தொடர்ச்சியாக தங்களின் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குகின்றபோதுதான் விடுதலையின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எமது பயணம் மேலும் விரைவுபடுத்தப்பட்டு முடிவுப்புள்ளியை எட்ட முடியும்.
சிறந்த நாட்டுப்பற்றாளர் சிவநேசன்
"மாமனிதர்" சிவநேசனுடன் நான் மிகவும் நெருங்கிப் பழகிய ஒருவன். அவர் ஒரு சிறந்த பண்பாளர். நல்ல நண்பர். நல்ல மனித நேயம் கொண்டவர். மக்கள் தொண்டன். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதில் மிகவும் ஆழமான சிந்தனையுள்ளவர்.
போராட்டத்திலும் தேசியத்திலும் மிகவும் பற்றுக்கொண்டவர். தேசியத்திற்காக உழைத்தவர். இவ்வாறு அவரைப்பற்றி நீண்ட வரிகளைக் கூறிக்கொண்டு போகலாம்.
மிகவும் சிறந்ததொரு நாடாளுமன்ற உறுப்பினரை அந்த மக்கள் இழந்திருக்கின்றனர். உண்மையில் அவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் துடிதுடித்ததையும் பெருந்திரளான மக்கள் இறுதி ஊர்வலத்தில் திரண்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது. இதிலிருந்து அவரது சேவை எவ்வாறானது என்பதனை உணரக்கூடியதாவிருந்தது. மிகவும் மனமுடைந்த நிலையிலும் மனம் வெந்த நிலையிலும்தான் நாங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது.
இதற்கும் அப்பால் சிறந்ததொரு நாட்டுப்பற்று - தேசப்பற்றுள்ள ஒருவரையும் நாங்கள் இழந்திருக்கின்றோம். அவரது இறுதி ஊர்வலம் கிராமம் கிராமமாக கொண்டுசெல்லப்பட்ட போது அந்த மக்கள் வீதிகளில் நீண்ட நேரமாகக் காத்து நின்று அவருக்கு மலர்வணக்கம் செலுத்தியதையும் பார்க்கின்ற போது மிகவும் ஒரு எழுச்சியும் பாரிய வேதனையும் மக்கள் மத்தியில் இருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது.
ஆயுதமுனையில் மட்டக்களப்பு தேர்தல்
மட்டக்களப்பில் நடத்தப்பட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தல் என்பது உண்மையில் ஒரு கேலிக்கூத்தான தேர்தலாகும். அங்கு ஜனநாயக ரீதியாகத் தேர்தல் நடத்தப்படவில்லை.
பொதுமக்களுக்கு அப்பாற்பட்ட, பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தேர்தலாகத்தான் இது அமைந்திருந்தது. 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும் அங்கு மக்கள் பலவந்தப்படுத்தப்பட்டு- அச்சுறுத்தப்பட்டு - வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கு பல சான்றுகள் எம்மிடம் இருக்கின்றன.
வாக்காளர் அட்டைகளைக்கூட அந்த ஆயுதக்குழு சிலரிடம் பணம்கொடுத்து வாங்கியிருக்கின்றது. அச்சுறுத்தி பறித்துச் சென்றுள்ளனர். இப்படித்தான் இந்த வாக்களிப்பு நடைபெற்றிருக்கின்றது.
மக்கள் தாங்களாக விரும்பி வாக்களித்தனர் என்று சொன்னால் அது மிகக்குறைந்த, உண்மையில் பத்து விழுக்காட்டுக்கும் குறைவான மக்களே அவ்வாறு வாக்களித்திருக்கலாம்.
வேட்பாளர்களின் உற்றார், உறவினர்கள், அயலவர்கள் என்று வாக்களித்திருக்கலாம். ஏனைய மக்கள் விரும்பி வாக்களிக்கவில்லை.
எனினும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாட்டினாலும் படைகளைப் பயன்படுத்தியும், அங்குள்ள ஆயுதக்குழுக்களின் அதிகாரங்களைப் பயன்படுத்தியும், ஆயுதக்குழுக்களின் அடியாட்களைப் பயன்படுத்தியும் வாக்களித்துவிட்டு அங்கு ஜனநாயகமான தேர்தல் நடந்துள்ளது, அந்த தேர்தலை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்று கூறுகின்றனர்.
மட்டக்களப்பு மாநகர சபையில் சிறிலங்கா சுதந்திரக் கூட்டமைப்புடன் ஆயுதக்குழு இணைந்து போட்டியிட்டு மாநகர சபையைக் கைப்பற்றியிருக்கின்றது. எனவே அரசின் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் மக்கள் அங்கு ஆயுதக்குழுவையோ அரசையோ ஏற்றுக்கொள்ளவில்லை.
சந்தர்ப்ப சூழ்நிலையாக இந்த வாக்களிப்பு நடைபெற்றது. இதன் காரணமாகத்தான் அங்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆகவே சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளிடம் இருந்து கிழக்கை கைப்பற்றியிருக்கின்றோம், அங்கு ஜனநாயகமான தேர்தலை நடத்தியிருக்கின்றோம், மக்கள் ஜனநாயக ரீதியில் வாழ விரும்புகின்றனர் என்று கூறினாலும் உண்மைநிலை அதுவல்ல. உண்மைநிலை அங்கு மறுபுறமாகவே - எதிர் எதிராகவே உள்ளது.
மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், வாய் திறப்பதற்கு அச்சப்படுகின்றனர், இராணுவ அடக்குமுறைக்குள் வாழ்கின்றனர், இராணுவக் கெடுபிடிக்குள் வாழ்கின்றனர்.
மட்டக்களப்பு நகரப் பகுதியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளிடம் இருந்து இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டு விட்டது என்று சொன்னால் ஏன் அங்கு இத்தனை சோதனைச் சாவடிகள் தேவை? மக்களை சோதனைக் கெடுபிடிகளின்றி விடலாம். மக்கள் சுதந்திரமாக நடமாட விடலாம். ஆனால், இராணுவ கெடுபிடிக்கும், அடக்குமுறைக்குள்ளும் தான் அந்த மக்கள் வாழந்து கொண்டிருக்கின்றனர்.
அங்கு ஆயுதமுனையில் ஒரு தேர்தல் நடத்தப்பட்டிருக்கின்றது. ஒரு ஆயுதக்குழுவிடம் கிராமங்களின் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயக முறையிலான ஒரு அரசு ஆயுதக்குழுவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு, ஆயுதக்குழுவைப் பயன்படுத்தி மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கிறோம் என்று கூறுவதானது ஒரு கபடத்தனமான பொய்ப்பிரசாரம் ஆகும்.
மக்களை இப்படி ஏமாற்றுகின்ற காரியத்தை ஒருபுறத்தே செய்துகொண்டு மறுபுறத்தே அனைத்துலக சமூகத்தையும் சிறிலங்கா அரசாங்கம் ஏமாற்றுகின்றது.
அனைத்துலக சமூகமும் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த பொய்ப்பிரசாரத்தை முட்டாள்த்தனமாக ஏற்றுக்கொள்கின்றதா அல்லது சிறிலங்காவின் நடவடிக்கைகளை அறிந்து கொள்கின்றதா என்பதனை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேர்தலின் உண்மையான பிரதிபலிப்பு வெளிப்பட்டுவிட்டது. அனைத்துலகத் தூதுவர்களை அழைத்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம நிதி உதவியைக் கோரியிருக்கின்றார்.
கிழக்கில் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்கவிருக்கின்றோம் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவருவதானது ஒரு பொய்யான பரப்புரை ஆகும்.
போருக்கான ஆயுதத் தளபாடங்களைச் செய்வதற்கும் போருக்கு பயன்படுத்துவதற்கும் என்றே இப்போது அவசர அவசரமாக இந்த நிதி கோரப்படுகிறது.
கிழக்கில் மூதூர், சம்பூர்ப் பகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்களை இடம்பெயர வைத்து அங்கு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குப் பின்னர் "கிழக்கின் உதயம்" என்ற பெயரில் 180 நாள் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்துலக நாடுகளிடம் இருந்தெல்லாம் நிதி சேகரிக்கப்பட்டது.
ஆனால் என்ன நடைபெற்றது? அங்கே எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எவ்வாறு அந்தப் பிரதேசங்கள் இருந்தனவோ அவ்வாறுதான் இன்றும் அந்தப் பிரதேசங்கள் இருக்கின்றன. வீதிகள் அதே கதியில்தான் இருக்கின்றன. பாடசாலைகள் அவ்வாறுதான் இருக்கின்றன. பொது வசதிகள் அனைத்தும் இருந்தவாறுதான் இருக்கின்றன. அங்கே எந்தவொரு அபிவிருத்தியும் நடைபெறவில்லை.
எந்தவொரு வேலைத் திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. 180 நாள் என்று கூறி அந்த 180 நாளும் கடந்துவிட்டது. "கிழக்கின் உதயம்" என்றுகூறி அனைத்துலக நாடுகளில் இருந்து பெறப்படும் நிதி அனைத்தும் போருக்கே செலவிடப்படுகின்றது.
அதேபோல்தான் இப்போது உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தி கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம், கிழக்கை கட்டி எழுப்பப் போகின்றோம் என்று அனைத்துலக நாடுகளிடம் கூறினாலும் அனைத்து நிதியும் போருக்காகவே பயன்படவுள்ளது. அதற்கான முனைப்புக்களே நிகழ்கின்றன.
போரில் தற்போது வடக்கில் சிறிலங்காப் படையினர் பாரிய பின்னடைவுகளைக் கண்டு வருகின்றனர், இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். போதியளவு இராணுவத் தளபாடங்களையும் அங்கு அவர்களால் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. உச்ச நிலையில் அங்கு சமர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆகவே தொடர்ந்து இந்தப் போரை முன்னெடுத்துக்கொண்டு செல்லவேண்டுமானனால் நிதி தேவை. இப்போது சிறிலங்காவின் கஜானாவில் வங்குரோத்து ஏற்பட்டுவிட்டது.
எனவே அனைத்துலக நாடுகளிடம் கிழக்கின் அபிவிருத்திக்கான நிதியைப் பெற்று போருக்காகப் பயன்படுத்தப் போகின்றது. அதனை அனைத்துலகம்தான் இனிமேல் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
மோசமான நிலைப்பாட்டில் இந்தியா
தொடர்ச்சியாக சிறிலங்காவிற்கு இந்தியா உதவிகளைச் செய்து வருகின்றது என்பதுதான் உண்மை.
உச்சகட்ட மனித உரிமை மீறல்களைச் செய்து கொண்டிருக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் அங்கு அழைக்கப்பட்டு அவருக்கு இராஜமரியாதை எல்லாம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிரான போரை தொடர்ந்து மேற்கொள்வதற்கு இதன் மூலம் இந்திய மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்திருக்கின்றது. அதனைத்த்தான் நாங்கள் இன்று எதிர்த்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு எதிரான போரை தொடர்ந்தும் இந்தியா மேற்கொள்ளுமானால் தமிழ் மக்களுக்கு இந்தியா மிகவும் மோசமானதொரு நிலையையே செய்யும்.
இருந்தாலும் இந்த நிலையிலும் இந்தியா எமக்கு பக்கபலமாக - உறவாக - இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கருதுகின்றனர். ஆனால் இந்தியா மிகவும் மோசமான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றது.
இந்திய எதிர்ப்பு ஏன்?
விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றுவிடக்கூடாது, இங்கு தனிநாடு ஒன்று அமைந்துவிடக்கூடாது, அவ்வாறு நடந்தால் அது தனது பிராந்தியத்திற்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற ஒரு கருத்து இந்தியாவுக்கு இருந்துவருகிறது.
இதனால் விடுதலைப் புலிகளை நசுக்கி, போராட்டத்தை நசுக்கி தமிழ் மக்களை தனது கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சிறிலங்காவிற்கு அது உதவி செய்து வருகின்றது.
எங்களின் போராட்டம் எதிர்காலத்தில் வெற்றியடையும் போது இந்தியா மறுதலையாகவும் நடக்கலாம். அதாவது எங்களுக்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு, எங்களுக்கான பங்களிப்புகளை வழங்குவதற்குக்கூட முன்வரலாம்.
ஆனால் தற்போதைய நிலைமையில் உள்ள சூழ்நிலைகளைத் தான் நாங்கள் ஆராய வேண்டியுள்ளது.
இந்தியா தொடந்தும் தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகவும் வேதனையான - தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும்.
ஏனெனில் உச்சக்கட்டமான மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசு செய்து வருகின்றது. இது அனைத்துலக ரீதியில் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. அத்துடன் சிறிலங்காவிற்கு எதிரான நிலைப்பாடுகளை அனைத்துலகம் எடுத்துவரும் நிலையிலும், மனித உரிமை அமைப்புக்கள் சிறிலங்காவிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையிலும் அயலில் இருக்கும் இந்தியா, சிறிலங்கா இராணுவத் தளபதியை அழைத்து அவருக்கு ஆலோசனைகள் - பயிற்சிகள் - வழங்கி அனுப்புவது என்பது மிகமோசமானதொரு நிலைமை.
ஆகவே இந்தியாவினுடைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்தியா மாற வேண்டும். தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா உதவி செய்யாவிட்டாலும் அவர்கள் எங்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கைகளையும் செய்யாமல் இருப்பதுதான் நல்லது என்றார் அவர்.