சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை 3320 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் இருப்பதாக
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டுவரை 2120 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட கடன்தொகை இன்றுவரை 3320 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
2004ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியிலேயே பெருந்தொகையில் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளன என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
சிறிலங்கா சின்ன நாடுகளிலிருந்தோ, மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துமாறு நிபந்தனை முன்வைக்கும் நாடுகளிடமிருந்தோ கடனுதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண கூறியிருப்பதானது, மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காது என்பதையே எடுத்துக்காட்டுகிறது என அவர் கூறினார்.
ஏற்கனவே, சிறிலங்காவிற்கு இருக்கும் வெளிநாட்டுக் கடன்களுக்கு மேலதிகமாக 5 வங்கிகளிடமிருந்து உயர்வட்டிவீதத்தில் 300 மில்லியன் ரூபாவைக் கடனாகப் அரசு முயற்சிக்கிறது. மிஹின் எயார் ஏற்கனவே 3 பில்லியன் ரூபா நட்டத்தில் செயற்படுகிறது.
9 வீதமான வட்டிக்கு மேலும் பல கடன்களை வெளிநாடுகளில் பெற்றுக்கொள்ள சிறிலங்கா முயற்சித்து வருகிறது. வரவு-செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் வருமானமே 750 பில்லியன் ரூபாவாக இருக்கின்ற போது, வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடனுக்கான வட்டியைச் செலுத்தவே போதாதுள்ளது என ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
சிங்கள, தமிழ் வருடப்பிறப்புவரை எரிபொருள்களின் விலை கூட்டப்படமாட்டாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய ரவி கருணாநாயக்க, வருடப்பிறப்பிற்குப் பின்னர் நிச்சயமாக எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் எனக் கூறினார்.