சிறிலங்கா அரசாங்கம் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவிற்கு பல்வேறு வழிகளிலும் உதவியளித்து வருவதாலேயே சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கிவந்த அனைத்து உதவிகளையும் அமெரிக்க அரசாங்கம் இன்று முற்று முழுதாக நிறுத்தியுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், துணை இராணுவக்குழுவான பிள்ளையானுடன் முறைகேடான தொடர்புகளைப் பேணி வருகின்றது. பிள்ளையான் குழுவினர் சிறார்களைப் படையில் சேர்த்து வருகின்றனர் என்று அமெரிக்கா கூறியிருக்கின்றது. அது மட்டுமன்றி மனித உரிமை மீறல்களிலும் சிறிலங்கா ஈடுபட்டு வருகின்றது.
இந்தப் பின்னணியிலேயே சிறிலங்காவிற்கான அனைத்து இராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியிருக்கின்றது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்தும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடனான உறவுகளைப் பலப்படுத்தியிருந்தோம். அமெரிக்காவில் இருந்து போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்தோம். போர்க்கப்பல் ஒன்றையும் அமெரிக்கா அப்போது எமக்கு வழங்கியது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக பிள்ளையான் குழுவினருடன் ஒப்பந்தம் செய்துள்ள அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பிள்ளையான் குழுவினருக்கு தேவையான நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றது. கிழக்கில் அரசாங்கம் இரண்டாவது வரதராஜப் பெருமாளை உருவாக்கவே முனைகின்றது.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பிள்ளையான் குழுவினரால் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். படையினர் கூட பிள்ளையான் குழுவினருக்கு வாக்களிக்குமாறு மக்களை அச்சுறுத்தியிருக்கின்றனர்.
நீதியான தேர்தல் ஒன்று அங்கு நடைபெறவில்லை. சுயாதீன தேர்தல் நடைபெற வேண்டுமாயின் தேர்தல் ஆணைக்குழு அங்கு தனது பணிகளைச் சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும். கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்றே நாம் வலியுறுத்துகிறோம் என்றார் அவர்.