பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இரண்டு இலட்சத்து இருபது ஆயிரம் டொலர் பெறுமதியான உபகரணங்களை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது.இந்த உபகரணங்களைக் கையளிக்கும் வைபவம் நேற் றுக் காலை அமெரிக்க தூதகரத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத்துக்கு எதிரான படையினரின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவுமே இந்த உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், குண்டு செயலிழக்கும் பிரிவினர் ஆகியோர் பங்கு கொண்டனர். இவர்களுக்கு இந்த உபகரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விளக்கமும் அளிக்கப்பட்டது. இங்கு அமெரிக்க தூதுவர் உரையாற்றுகையில்,
பயங்கரவாத தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே பொலிஸ் திணைக்களத்திற்கு இந்த உபகரணங்களை வழங்குகின்றோம். இலங்கை உட்பட நட்பு நாடுகளில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் மனித உரிமைகளின் தரத்தை மேம்படுத்தவும் அமெரிக்கா இணைந்து செயற்பட்டு வருகிறது.
பயங்கரவாதத்தினை ஒழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவியாகவும் பாதுகாப்பை வழுப்படுத்தவும் மேலோங்கச் செய்வதற்காகவுமே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
குண்டு வெடிப்புகளிலிருந்து பாதுகாக்கும் உடைத் தொகுதிகள் மூன்று, குண்டு வெடிப்பு இடம் பெற்ற பகுதியில் புலன் விசாரணை செய்யும் வேளையில் அணியும் இரண்டு உடைகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கான அவசர வேளையின் போது அணியும் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு உபகரணங்களையே வழங்கியுள்ளோம். இவை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்றார்.
இதேவேளை, அமெரிக்க தூதுவர் ரொபட் ஒ பிளெக்குக்கும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நேற்று இராணுவ தலைமையகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது இராணுவ தளபதி, அமெரிக்க தூதுவருக்கு வன்னிகள நிலைமைகள் குறித்து விளக்கியத்துடன், பொது மக்கள் பலர் தமது வீடு வாசல்களை கைவிட்டு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிவருவதாகவும் கூறினார்.
கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இராணுவ தளபதி, கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், சிவில் நிர்வாகத்தை மீண்டும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறனார்.
இலங்கைப்படையினருக்கு அமெரிக்கா பயிற்சி அளித்துவருவது தொடர்வதும் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது. இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.