நாடு இன்று முகம் கொடுக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு புதுவாழ்வு கிட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நபி (ஸல்) அவர்கள் மனித சமூகத்தினரிடையே புனிதராக இறைவனின் நெருக்கத்திற்கும் நம்பிக்கைக்கும் தயவிற்கும் உட்பட்டவராக மனித சமூகத்திற்கு வழிகாட்டத் தோற்றம் பெற்றவராவார்.
இறைவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வாழ்ந்து, அன்று வீழ்ச்சியுற்றுக் காணப்பட்ட சமூகத்தை எழுச்சிப் பெறச் செய்ய முடிந்தமைக்கு நபி (ஸல்) அவர்களிடம் பொதிந்து காணப்பட்ட விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, உளத்தூய்மை, நற்குணம் மற்றும் கருணை ஆகியவையே பிரதான காரணிகளாகும்.
மேலும் பணிவன்புடனும் நிதான சிந்தனையுடனும் செயற்பட்டு, ""நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதனுக்கு மனிதன் சகோதரனாவான்'' என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டிய நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை இன்றைய இக்கட்டான உலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாததாகும்.
எனவே குழப்பம் மிகுந்து காணப்படும் இன்றைய காலகட்டத்தில் மனிதருள் புனிதராக வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் உலகிற்குக் கற்றுக் கொடுத்த பாதையில் சென்று நம் நாடு இன்று முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு புதுவாழ்வு கிட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதய சுத்தியுடன் அன்னாரின் பிறந்த தினத்தில் பிரார்த்திப்போம்.