சீன அரசு இலங்கைக்கு வழங்கும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல. இலங்கையர் அனைவரையும் நாம் எமது நண்பர்களாகக் கருதகின்றோம்.
இலங்கையர் என்றால் அது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட இனத்தையும், அரசியல் கட்சியையும் திருப்திப்படுத்தும் விதத்தில் நாம் இலங்கை அரசிற்கு உதவிகள் வழங்கவில்லை. இலங்கைக்கு பாரிய இராணுவ உதவிகளை சீனா வழங்குகின்றது என்பது தவறான தகவலாகும். தயவு செய்து மக்களிடம் இதை எடுத்துக் கூறுங்கள் என்று இலங்கைக்கான சீன தூதுவர் தபோயோ, மே.ம.முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் எம்.பியிடம் தெரிவித்தார்.
நேற்று மாலை சீனத் தூதரகத்தில் மனோ எம்.பியுடன் கலந்துரையாடிய சீனத் தூதர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது. அதனால் யுத்தம் நடைபெறுகின்றது. எனவே இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கும் பொழுது நாம் மிக எச்சரிக்கையாக இருக்கின்றோம். பெருந்தொகை ஆயுதங்களையும், உயர் திறன் கொண்ட ஆயுதங்களையும் நாம் வழங்குவதில்லை. இலங்கை மக்கள் அனைவரும் சமத்துவமாகவும், யுத்தமின்றியும் வாழ்வதையே நாம் விரும்புகின்றோம். சீனாவில் ஹன் இனம் பெரும்பான்மை இனமாகும். ஆனால், ஹன் ஆதிக்கத்தை நாம் திணிக்கவில்லை. எமது நாட்டில் 55 இனக்குழுக்கள் இருக்கின்றன.
திபெத் உட்பட அநேக இனங்களுக்கு உள்ளக சுயட்சி வழங்கபட்டுள்ளது. அவர்களது பிராந்தியத்தில் அவர்களது மொழியயே பயன்படுத்துகின்றார்கள். திபெத்திய பிரச்சினைக்கும், இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. இதை நாம் புரிந்து கொண்டுள்ளேர்..
எனவே எமது நாட்டுப் பிரச்சினையும் இலங்கையின் இனப்பிரச்சினையையும் நாம் போட்டு குழப்பிக் கொள்ளமாட்டோம். சீனாவில் பிரிவினைவாதத்தை சர்வதேச ஏகதிபத்தியம் திட்டமிட்டு உருவாக்குகின்றது. ஆனால், இலங்கையில் தமிழர் போராட்டத்திற்கு சர்வதேச ஏகாதிபத்தியத்தின் பின்னணி இருப்பதாக சிலர் சொன்னாலும், அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதே வேளையில் இலங்கைக்கு நாம் சிறு தொகை சாதாரண ஆயுதங்களை வழங்குகின்றோம். கனரக ஆயுதங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக இலங்கையில்; உள்ள தமிழ் ஊடகங்களை மிக விரைவில் சந்திக்க விரும்புகின்றேன். அதே வேளையில் உங்கள் கருத்துக்களை எனது அரசிற்கு நிச்சயம் தெரிவிப்பேன்.