கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனமான வூஸ்க் யாழ்.மாவட்டத்தில் கல்வி மற்றும் பயிற்சியின் ஊடக புனர்வாழ்வு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த
55 மில்லியன் ரூபாவைச் செலவிட திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் யாழ்.மாவட்டத்தில் வெல்டிங், அலுமினிய இணைப்பு, நீர்க்குழாய் பொருத்துதல், வீட்டு மின்சார இணைப்பு, மோட்டார் சைக்கிள் திருத்துதல், விவசாய உபகரணங்களை சீர்செய்தல் ஆகிய தொழில் பயிற்சிகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயற்படுத்த உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களான சாவகச்சேரி அறவழிப் போராட்டக்குழு, சர்வோதய இயக்கம், வடமராட்சி ஊற்று நிறுவனம், யாழ். தொழிற்திணைக்களம் உட்பட ஐந்து நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை செய்துள்ளன.
இந்நிறுவனங்களுக்கு முதற்கட்டமாக தலா பதினைந்து இலட்சம் ரூபா தொழில்சார் உபகரணங்களையும், பயிற்சிகளை ஆரம்பித்து நடாத்துவதற்கான நிதியினையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கான ஒப்பந்தப் பத்திரங்களைக் கையளித்தார்.
கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனம் இலங்கை அரசாங்கத்தின் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சுடன் இணைந்து இலங்கையில் புனர்வாழ்வு செயல்திட்டங்களை நாடுமுழுவதும் செயல்படுத்தி வருகின்றது.
இந்நிறுவனத்துக்கான நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்களாக நோர்வே தூதுவராலயம், கனேடிய செஞ்சிலுவைச் சங்க, யுனிசெப், சிறுவர் நிதியம், கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிதியம், கூட்டாக வழங்கி வருகின்றன. இவர்களால் செயல்படுத்தப்படும் சகல வேலைத் திட்டங்களும் பால்நிலை சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வுகளுக்கு கனேடிய உலகப் பல்கலைக்கழக யாழ். பிராந்திய வெளிக்களப்பணிப்பாளர் வி.ஜெயராஜசிங்கம் தலைமை தாங்கினார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்; யாழ்.மாவட்டத்தில் நாம் முன்னெடுத்துவரும் தொழில் பயிற்சித் திட்டங்களில் பெருமளவு ஆண்களும் பெண்களும் பங்குகொண்டு சுயமான தொழில் முயற்சியில் ஈடுபட்டுவருவது பாராட்டுக்குரியது.
யாழ்.குடாநாட்டில் மனித வலுவை பயன்படுத்தும் தொழிலாளர் பற்றாக்குறை குறைந்து வருகின்றது. இப்பயிற்சிகள் 2008/2009 ஆம் ஆண்டுக்கும் தொடரவுள்ளோம். அதற்காக நாம் ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை செலவிட திட்டமிட்டுள்ளோம். இது தொழிற் பயிற்சிகளை நடாத்தும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பயிற்சிக்கால செலவினங்களை ஈடு செய்யவும் பயிற்சி பெறுபவர்கள் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க அவர்களுக்கு தொழில்சார் உபகரணத் தொகுதிகளை வழங்கவும் செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ் தமது உரையில் சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் தாம் வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமமாகப் போய்ச்சேர வேண்டுமென்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
செயல் திட்டங்களை நீண்டகால கண்ணோட்டத்துடன் செயல்படுத்த வேண்டும். செயல்பாடுகள் நேர்மையானதாக அமைய வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் புனிதமாக இருக்க வேண்டும். சமுதாய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இவைகளையெல்லாம் நாம் கடைப்பிடிப்போமானால் நிவாரணங்கள் சமமாக பகிர்வதற்கு வாய்பளிப்பதற்கும் சேவை புனிதமடைவதற்கும் வழிவகுக்குமென்றார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறவழிப் போராட்டக் குழுத் தலைவர் வீ.சக்திவேல், என்.ஜீவகதாஸ் சர்வோதய இணைப்பாளர் எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினார்கள்.