இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் உதவிகளை தவிர்க்கக் கோரி மதுரை மற்றும் சென்னையில் பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளதாக தமிழக நடிகரும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான விஜய டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கையில் வாழும் தமிழர்கள் அங்குள்ள இராணுவத்தினரால் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுக்க தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் முன்வரவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப தமிழக அரசு முயற்சி செய்யவில்லை.
ஆனால், இலங்கை இராணுவத்தினருக்கு இங்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு தேவையான ராடார் கருவிகளை அளித்து வருகின்றோம். இந்திரா காந்தி ஒரு சீக்கியரால் தான் கொல்லப்பட்டார். அதற்காக சீக்கியர்களுக்கு இந்தியாவில் தடை விதித்தா விட்டோம். தற்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் கூட சீக்கியர் தான். இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்வதை தவிர்க்க வலியுறுத்தி மதுரையில் மார்ச் 29 ஆம் நாளும், சென்னையில் ஏப்ரல் 5 ஆம் நாளும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார் அவர்.