வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றவோ, அங்கு தேர்தலொன்றை நடத்துவதற்கோ அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை அரசாங்கம் வாக்குகளை கொள்ளையடிக்க போகின்றதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
பிரிவினைவாதம் தோற்கடிப்பதற்கு முன்னரே அதிகார பகிர்வினை முன்வைத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மாகாண சபையை ஏற்படுத்துவதற்கு முற்சிப்பது அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவாகும். அவ்வாறான நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இது பிரிவினை வாதத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாகும் என்றும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜே.வி.பி அரசியல் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்தவில்லை. சர்வ கட்சி ஆலோசனை குழுவின் யோசனைகளின் பிரகாரமும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அமைவாகவும் அரசாங்கம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அபாயகரமானது மட்டுமல்லாது பிழையான அரசியல் முடிவாகும் இவ்வாறான முடிவினால் இறுதியில் பிரிவினைவாதிகள் சக்தியடைவதே பெறுபேறாக அமையும். தேசப்பற்றாளர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் வெளிநாட்டு கொள்கைகளுக்கு ஏமாந்து அரசாங்கம்
மாகாண சபையை ஏற்படுத்துமாயின் அதற்கெதிராக மாகாண சபைக்குள்ளேயே பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதற்காக போராடவேண்டி ஏற்படும். அதனால்தான் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடவுள்ளது. மாகாண சபைக்குள்ளேயே சென்று பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நடைபெற்று முடிந்த மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலில் பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் அரசாங்கம் போட்டியிட்டதுடன் மாநகரசபையிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த நிலையிலேயே அரசாங்கம் மாகாண சபையில் போட்டியிடுமாயின் அதிகாரத்திருக்கு வருவதற்காக அதிகளவான சாத்தியகூறுகள் பிரிவினைவாதிகளுக்கே இருக்கின்றன.
பயங்கரவாதிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றியது முதல் வன்முறைகளற்ற உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்திமுடிக்கப்பட்டமை வரை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பங்கு அளப்பறியதாகும். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு படையினர் தங்களது உயிர்களை இழந்துள்ளரே தவிர அமைச்சர் பிரதியமைச்சர்கள் இழக்கவில்லை.
ஜே.வி.பி நீதிமன்றம் சென்றதன் மூலமாகவே ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சி காலத்தில் 1987 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரிக்கப்பட்டது. அதற்கு பின்னரே கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டது இவ்விரண்டுமே மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் செயற்பாட்டின் மூலமாக ஏற்படுத்தப்பட்டதல்ல,ஜே.வி.பியின் செயற்பாட்டினாலேயே இவை கைகூடின. அன்று வடகிழக்கு பிரிக்கப்படாமல் இருந்திருக்குமானால் பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கை மீட்டு அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கத்தினால் முன்னெடுத்திருக்க முடியாது.
நடைபெற்ற மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டியிடாமையினால் அங்கு போட்டி ஏற்படவில்லை,அரசாங்கமும் பிள்ளையான் குழுவும் இணைந்து முன்னணி அமைத்ததன் மூலமாக அத்தேர்தலில் போட்டி ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைந்திருந்தது, வெளிப்படையாக ஆயுதம் பயன்படுத்தப்படாவிடினும் பிள்ளையான் குழு ஆயுத குழுவாகவே தேர்தலில் போட்டியிட்டது. அதனால் தான் ஜே.வி.பி அத்தேர்தலில் போட்டியிடவில்லை.
மாகாண சபை தேர்தலிலுள் பிள்ளையான் குழுவை இணைத்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது இந்நிலையில் கிழக்கிலிருந்து விசேட அதிரப்படையினரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. தேர்தலுக்கு முன்னர் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் மூலமாக அரசாங்கம் மாகாண சபைதேர்தலில் அரசாங்கம் வாக்குகளை கொள்ளையடிக்க போகின்றதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
பிள்ளையான் குழுவின் அழுத்தங்கள் காரணமாகவே விசேட அதிரடிப்படையினர் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்ற தகவல்கள் உண்மையாயின் கிழக்கிலிருந்து அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை பாரதூரமானதாகும்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை நிறுவõமல் இவ்வாறானதொரு தேர்தலுக்கு செல்வதன் மூலமாக அரசாங்கம் ஜனநாயகத்தை அப்பட்டமாக மீறுகின்றது. என்பது புலனாகின்றது. அரசாங்கம் கிழக்கில் நீதியான தேர்தலொன்றை நடத்தவேண்டுமாயின் சட்டரீதியற்ற நிலையில் ஆயுதங்களை வைத்திருப்போரிடம் ஆயுதங்களை களைவதுடன் புலிகளிடமிருந்த அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்குமாயின் அவர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பை வழங்கவேண்டும்.