தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது இராணுவத் தந்திரோபாயத் திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை எதிர்பார்த்த காலவரையறைக்குள் தராதமையால் வேறு வழிவகைகளை நாடவேண்டிய சிக்கல் கொழும்பு அரசுத் தலைமைக்கு ஏற்பட்டிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் விவரிக்கின்றன.
பல்வேறு உதிரிக் கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவை தனது நிறைவேற்று அதிகாரப் பலம் என்ற பூச்சாண்டியைக் காட்டி வரித்துக் கொண்டிருக்கும் மஹிந்த அரசு, அந்த ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதை யுத்த களத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கிடைக்கக்கூடிய வெற்றி உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தது.ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அந்த வெற்றியோ கானல் நீர்போலத் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது எட்டாக் கனியாக.அதைத் தட்டிப்பறிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்ற யதார்த்தம் "ராஜபக்ஷ அண்ட் பிறதர்ஸ்' கம்பனிக்குப் புரியத் தொடங்கிவிட்டதால் ஆட்சியைக் கொண்டிழுக்க அல்லது நீடிக்க புதிய மாற்றுவழி குறித்து யோசிக்கின்றது மஹிந்தரின் தலைமை.கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது கடைசிக் கட்டத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியதன் மூலம் மஹிந்தரின் அரசைக் காப்பாற்றியது ஜே.வி.பி.ஆனால் அத்தகைய உதவி இனிமேலும் ஜே.வி.பியிடம் இருந்து கிட்டுவது துர்லபமே என்று உணர்ந்துள்ள அரசுத் தலைமை அதனால் மாற்றுவழி தேட முயல்கின்றது.
பொருட்களின் விலைவாசியும் எக்கச்சக்கமாக எகிறி, இராணுவ யுத்தக் களமுனையில் எதிர்பார்த்த வெற்றிகளை நாட்டுக்கு இந்த அரசு பெற்றுக்கொடுக்கவும் தவறியுள்ள இந்தச் சூழலில், இனிமேலும் இந்த அரசுக்கு முண்டு கொடுத்துத் தனது மூக்கை உடைத்துக்கொள்ள ஜே.வி.பி. அப்படி ஒன்றும் மிக முட்டாள் தனமான கட்சியல்ல.
எனவே, இன்னொரு தடவை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் அரசு தப்பிப்பிழைக்க ஜே.வி.பி. உதவும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமுமில்லை; பலனுமில்லை.ஆகவே, அத்தகைய வாக்கெடுப்பு நெருக்கடி ஒன்று நாடாளுமன்றுக்கு வருவதற்கு முன்னரே தனது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசிக்கும் மஹிந்தரின் அரசுத் தலைமை, புதிய பொதுத்தேர்தல் ஒன்றை நாடுவதே அதற்கு ஒரே வழி எனச் சிந்திக்கத் தொடங்கியிருப்பதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேச்சடிபடுகின்றது.
நடந்து முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலையும், நடக்கப்போகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலையும், மேற்படி பொதுத் தேர்தலுக்கான கள நிலைவரத்தை உரசிப் பார்க்கும் அமிலச் சோதனையாகக் கருதிச் செயற்படுகின்றது அரசு.திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றை இந்த வருட மத்தியில் பெரும்பாலும் ஜூலை, ஓகஸ்ட் மாதத்தில் அரசு நடத்தத் திட்டமிடுகின்றது என்ற தகவலை ஜே.வி.பியின் முன்னணிப் பிரமுகரான அனுரகுமார திஸநாயக்கவும் வெளியிட்டிருக்கின்றார்.
அப்படி ஒரு பொதுத் தேர்தலை, தற்போது பல்வேறு கட்சிகளிலிருந்தும் பிய்த்து உதறிக் கொண்டு வந்து அமைச்சர் பதவிகளுக்காகத் தன்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உதிரிகளை வைத்துக்கொண்டு சந்திக்க விழைகிறது அரசு.
அம்முயற்சியில் அரசு எதிர்பார்த்த வெற்றியை ஈட்டுமா அல்லது யுத்த முனையில் "இலவு காத்த கிளியாக'ப் பார்த்திருப்பது போன்ற நிலைமையைத்தான் அதுவும் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், அமைச்சுப் பதவிகளுக்காக அரசுத் தரப்போடு போய் ஒட்டிக்கொண்ட உதிரிகளுக்கு அத்தகைய திடீர்ப் பொதுத் தேர்தல், அவர்களின் அரசியல் வாழ்வுக்கான மரணப் பொறியாகவே அமையும் என்பதை மட்டும் இப்போதே அறுதியிட்டுக் கூறிவிடலாம்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிலிருந்து அதிருப்திக்குழு என்ற பெயரில் அவ்வப்போது அரசுத் தரப்புக்கு அமைச்சர் பதவிகளுக்காக "பல்டி' அடித்து, அணிமாறி, உதிரிகளாகத் தம்மை அரசுடன் இணைத்துக் கொண்டவர்களுக்கு அரசின் உத்தேச திடீர் பொதுத்தேர்தல் திட்டம் இப்போதே வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது.அப்படி ஒரு திடீர்ப் பொதுத்தேர்தல் நடக்குமானால், இப்படி "ஒரிஜினல் ' கட்சியிலிருந்து "பல்டி' அடித்த எவருமே மீண்டும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளாகத் தேறமாட்டார்கள் என்பது அவர்களுக்கே நன்கு தெரியும். ஆனால், இவ்வாறு தமது அரசியல் எதிர்காலத்தையே அரசியல் சூதாட்டத்தில் பணயம் வைத்து, அரசுத் தலைமைக்கு முண்டுகொடுக்க முன்வந்த இந்தக் "குத்துக்கரணங்களை 'ஒரேயடியாகக் கைவிட்டு, தனது அரசைத் தக்கவைக்கும் முயற்சிக்காக இத்தகைய எந்த வாய்ப்பான நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசுத் தலைமை பின்நிற்காது என்பதும் தெளிவு.
அத்தகைய முயற்சியாக திடீர்ப் பொதுத் தேர்தலை மஹிந்தரின் தலைமை அறிவிக்கும்போதுதான், அதுவரை அணிமாறி, மஹிந்தரின் அரசுக்கு முண்டு கொடுத்துத் தவறிழைத்தோர், தமது பிழையை உணர்ந்து கொள்ள முற்படுவர். ஆனால் அத்தவறுக்கு பிராயச்சித்தம் செய்யக்கூட அப்போது அவர்களுக்குக் காலம் கடந்து விட்டிருக்கும் என்பதுதான் யதார்த்த நிலைமையாக இருக்கும்.