யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்குகின்ற அரசாங்கத் திணைக்களங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் வெளிமாவட்டங்களுக்குப் பயண அனுமதி பெறுவதற்கு நேற்று முதல் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் கே. கணேஸ் அறிவித்துள்ளார்.
இதுவரை காலமும் வெளிமாவட்டத்திற்குச் செல்லும் அரசாங்கத் திணைக்களங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் அரசாங்க அதிபரிடம் பிரயாண அனுமதியைப் பெற்று வெளிமாவட்டத்திற்குச் சென்றுவந்தனர்.
இனிவரும் காலங்களில் வெளிமாவட்டத்திற்குச் செல்லவுள்ள அரச திணைக்களங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்கள் அனுமதிப்பத்திரத்தைத் தத்தம் திணைக்களத் தலைவர்களின் பெயர்ப் பட்டியலுடன் யாழ் மாவட்ட இராணுவக் கட்டளையிடும் இராணுவத் தளபதிக்கு அனுப்பி அவரின் அனுமதியுடனேயே வெளிமாவட்டத்திற்குச் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மைக்காலமாக அரச திணைக்களங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பெயர் விபரங்கள் யாழப்பாண மாவட்ட செயலகத்தால் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.