வட போர்முனை நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கொழும்பில் அரச தலைவர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட சிறப்பு பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் யாழ். குடாநாட்டு மற்றும் வன்னிப் பகுதி இராணுவத் தளபதிகள் உட்பட முப்படைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தற்போதைய படை நடவடிக்கைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்சவிற்கு விளக்கமளித்துள்ளனர்.
சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற இந்த மாநாட்டில் வவுனியா, மன்னார், மணலாறு, முகமாலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் படை நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,
முப்படைத் தளபதிகள்,
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ,
57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ்,
58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவீந்திர சில்வா,
59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த,
மற்றும் கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதிகள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடும் மழையிலும் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தனக்கு திருப்தி தருவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிராந்திய கட்டளை அதிகாரிகள் அழைக்கப்படுவதில்லை.
எனினும் அவசரமான நேரங்களில் அவர்கள் அழைக்கப்படுவதுண்டு. 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் பெரும் நெருக்கடியை சந்தித்த வேளை, அன்றைய யாழ். குடாநாட்டு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது என படைத்துறை அவதானிகள் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.