கிழக்கில் இருந்து அதிரப்படையினரை விலக்கி அங்கு வாக்குகளை கொள்ளையடிக்கும் சதித்திட்டத்தை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:
கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு நிலைகொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பினரை இடமாற்றம் செய்வது சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கிறது.
இது குறித்து தேர்தல் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீறும் செயலாகும்.
கிழக்கில் மாகாண சபைத் தேர்தலில் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காகவே அங்கிருந்த சிறப்பு அதிரடிப்டையினரை அரசாங்கத் தரப்பு வேறு பகுதிகளை நோக்கி நகர்ததியுள்ளது.
கடந்த முறை அரச தலைவருக்கான தேர்தலில் கிழக்கில் மகிந்த ராஜபக்ச கடுமையான பின்னடைவை சந்தித்திருந்தார். இனிவரும் தேர்தல்களிலும் இத்தகைய பின்னடைவுகள் ஏற்படாமல் இருப்பதற்கான சதித்திட்டத்தையே அவர் தற்போது மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்கு 17 ஆவது அரசியலமைப்பு சட்டத்திற்கு அமையவே நியமனம் வழங்கப்பட வேண்டும்.
தற்போது நாடாளுமன்றச் செயலாளர் நாயகமாக உள்ள சிறியானி விஜயசேகரவின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்தப் பதவிக்கு அரசாங்கம் தனது ஆதரவாளர் ஒருவரை நியமிக்க முனைகிறது.
தனது விசுவாசி ஒருவரையே இந்தப் பதவிக்கு நியமிக்க மகிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சி வெற்றியளித்தால் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் அடிதடி சண்டைதான் நடக்கும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு செயற்படுகிறார். முன்னர் சந்திரிகாவும் இவ்வாறு செயற்பட்டார். எனினும் அப்போது எழுந்த எதிர்ப்பால் அந்த முயற்சியை சந்திரிகா கைவிட்டார் என்றார் அவர்.
இதனிடையே நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் பதவிக்கான நியமனம் முறைப்படி நடக்க வேண்டும் என்று சபாநாயகர் லொக்கு பண்டாரவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.