வடக்கு, கிழக்கு மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 4 இலட்சத்து 47 ஆயிரம் பேர் வேலையற்றிருப்பதாகச் சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்தது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் அதிகாரிகள் கலந்துகொண்ட இவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்ததாவது;
இலங்கையின் தற்போதுள்ள மொத்த சனத்தொகையில் 70 இலட்சம் பேர் தொழில் செய்வோராவர், 42 சதவீதமானவர்கள் சேவைத்துறையிலும் 31 வீதமானவர்கள் விவசாயத்துறையிலும் 27 வீதமானோர் தொழிற்துறையிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வட, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் 4 இலட்சத்து 47 ஆயிரம் பேர் வேலையற்று உள்ளனர். வேலையற்றவர்களில் 9 சதவீதமானவர்கள் பெண்களாவர். எனினும், வேலையற்றவர் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்து செல்கிறது.
மாத்தறை மாவட்டத்திலேயே வேலையற்றவர்கள் அதிகமாகவுள்ளனர். மாகாண ரீதியாக தென்மாகாணத்திலேயே வேலையற்றவர்கள் அதிகமாகும்.
வேலையற்றவர்கள் குறைவாக காணப்படும் மாவட்டம் முறையே அநுராதபுரம், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களாகும்.
புத்தளம், பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் அசாதாரண தொழிலில் ஈடு படுகின்றனர்.
இதேவேளை, நூறு பேருக்கு ஒருவர் தொலைபேசியை உபயோகிப்பதுடன், கையடக்கத் தொலைபேசி பாவனை 38.2 சதவீதமாகவும் நிரந்தர தொலைபேசி உபயோகம் 13.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.