இலங்கை தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் எவை? என்பது குறித்து ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் விபரித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:
இந்திய அரசாங்கம் ஒரே கருத்தையே ஆழமாக வலியுறுத்தி வருகின்றது. இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட முடியாது என்பதே அந்தக் கருத்தாகும்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியப் பாதுகாப்பு அமைச்சும் அண்மையில் இந்தக் கருத்தையே எடுத்தியம்பியிருந்தது.
தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் ரீதியான தீர்வின் மூலம் சமாதான முன்னெடுப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தச் செய்தி யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு சேர்ந்ததாக விளங்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்நாட்டு அரசியல் தலைவர் ஒருவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் "ஒரே இலங்கைக்குள் அனைத்து சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
மேலும், "இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட முடியாது என்பதை நாங்கள் மிகவும் உறுதியாக நம்புகின்றோம்" என நாடாளுமன்ற ஆண்டறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் அரசியல், அரசியல் சாசன மற்றும் ஏனைய விடயங்களுக்கும் அனைத்து இன மக்களும் குறிப்பாக சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு இராணுவத் தளபாடங்கள், பாதுகாப்பு ஆலோசனை மற்றும் இராணுவப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அண்மையில் சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்து, சிறந்த வரவேற்பளித்திருந்தது.
இந்தச் செயலை தமிழீழ விடுதலைப் புலிகள் வன்மையாக கண்டித்திருந்தனர். மீண்டும் ஒரு வரலாற்று தவறிழைக்க இந்திய அரசாங்கம் விளைகிறது என அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதேபோன்றதொரு இரட்டைச் செய்தியையே அமெரிக்கா, சிறிலங்காவிற்கு விடுக்கிறது.
ஒரு புறத்தில் சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாரியளவு கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் கொலைகள் இலங்கையில் நடைபெற்று வருவதாகவும், இதற்கு எதிராக உரிய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், இந்தியாவைப் போன்றே அமெரிக்காவும், இராணுவத் தளவாடங்கள், போர்த் தந்திரோபாய ஆலோசனைகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை சிறிலங்காவிற்கு வழங்கி வருகிறது.
இந்த மாறுபட்ட செய்திகளிலிருந்து எது உண்மை என்பதை விளங்கிக் கொள்வது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
அரசியல் தீர்வு மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஒரு அக்கறை காணப்படும் அதேவேளை, ஒரு தரப்பின் இராணுவ பலத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது.
எனவே இதற்குப் பதிலளிக்கும் போது மூன்று காரணிகள் குறித்து அவதானிக்கப்பட வேண்டும்.
இலங்கையின் நிலத்துவ எல்லைகளை பாதுகாத்தல்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுத்தன்மையற்ற போக்கு,
இராணுவத் தீர்வுகளில் காணப்படும் நடைமுறைச் சாத்தியப்படாற்ற தன்மை என்பவை குறித்து ஆராயப்பட வேண்டும்.
ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கும் அநேகமான நாடுகள் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரம் சிறிலங்கா அரசாங்கத்தை விட ஓங்காமல் இருப்பதனை உறுதிப்படுத்துகின்றன.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்வுப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுவதாகவே இந்த நாடுகள் குறிப்பிடுகின்றன.
உலகின் பலம் பொருந்திய இராணுவச் சக்திகளான அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மறைமுகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் போருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டத்தில் உலகின் பலம் வாய்ந்த அநேக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கே ஆதரவளித்து வருகின்றன.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த ஒத்துழைப்பு போதுமானதாக அமையும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அரசாங்கம் மற்றும் அதனுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொள்ளும் அனைத்து சக்திகளும் இங்கேதான் தப்புக்கணக்கு போடுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்ச்சக்தி அதிகரிக்காமல் இருப்பதற்காகவே அநேகமான அனைத்துலக சக்திகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.
இதன் மூலம், இராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது என்ற அழுத்தமான செய்தியை புலிகளுக்கு உணர்த்த முயற்சித்துள்ளன.
எனினும், மனித உரிமைகள் மீறப்படக்கூடாது என்பதிலும், குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும் அனைத்துலக சமூகம் உறுதியான நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றது.
மேலும், இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வின் மூலம் முடிவு எட்டப்பட முடியாது என்பதே அநேகமான அனைத்துலக நாடுகளின் ஏகோபித்த கருத்தாக அமைந்துள்ளது.
இராணுவ நடவடிக்கைகளோ அல்லது அழுத்தங்கள் மூலமாகவோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையே அனைத்துலகத்தில் நடைபெறும் போராட்டங்களின் மூலம் தெளிவாகியுள்ளது.
இராணுவ ரீதியிலான தீர்வை நோக்கி முன்நகரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இந்த யதார்த்ததையே எடுத்துரைக்கவே அனைத்துலகம் வலிந்து செயற்படுகிறது.
சில விதி விலக்குகளைத் தவிர, அநேகமான சந்தர்ப்பங்களில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் குழுக்களுடன் அரசாங்கமே சமாதான முன்னெடுப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.
சில வேளையில் இலங்கையில் பல சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்துள்ள போதிலும், இலங்கை இந்த விதிவிலக்கு நாடுகளில் உள்டங்காது.
எவ்வளவு துரிதமாக அரசாங்கம் சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அவதானம் செலுத்துகிறதோ அவ்வளவு சீக்கிரம் சமாதானத்தைப் பெற்றுகொள்ள முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.