தமிழர் விடுதலைக் கூட்டணியின் "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்தும் முழு உரிமையையும் கைப்பற்றி அந்தச் சின்னத்தில் அந்தப் பெயரில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டி இடுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எத்தனித்து வருகின்றார்.
"உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்துவதற்கான முழு உரிமை தமக்கு இருப்பதை அங்கீகரிக்கும் படி தேர்தல் ஆணையாளர் நாயகத்தை எழுத்து மூலம் அவர் கோரி இருக்கிறார் என அறியவந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பான சிக்கல் நீதிமன்றம் வரை சென்றிருப்பது தெரிந்ததே.
கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஒரு புறமாகவும் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனும் ஏனையோரும் மறுபுறமாகவும் கன்னை கட்டி நிற்க இவ் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் கலந்தாலோசனை இல்லாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டங்களை செயலாளர் நாயகம் இரா.சம்பந்தன் கூட்டக் கூடாது என தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் கட்சியி கூட்டம் கூட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தேர்தல் ஒன்றில் போட்டி இடுவதானால் கட்சியின செயலாளர் நாயகத்தின் ஒப்பத்துடனேயே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் வேட்பாளர் தெரிவு உட்பட கட்சிப் பணிகளை முன்னெடுப்பதற்கான கட்சியின் பல்வேறு குழுக்களை செயலாளர் நாயகம் கூட்டுவதாயின் அதற்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி கட்சித்தலைவர் வீ.ஆனந்தசங்கரியினது ஒத்திசைவு அவருக்குத் தேவை. அது இல்லாத காரணத்தினால் கூட்டங்களும் கூட்டப்படவில்லை. தேர்தல்களிலும் அக் கட்சி போட்டியிடவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தோர் ஒருபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியில் தேர்தல்களில் நின்று வருகின்றார்கள். மறுபுறம் ஆனந்தசங்கரி மட்டும், அவ்வப்போது கூட்டமே கூட்டுப்படாத தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரைப் பயன்படுத்தி அக்கட்சியின் தலைவர் என்ற பெயரில் அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார். எனினும் கட்சியின் ஏனைய பதவியினரோ அல்லது செயலாளர் நாயகமோ தம்முடன் ஒத்திசைவு கொள்ளாத காரணத்தால் அவரால் அதற்கு அப்பால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இந் நிலையில், இப்போது கட்சியின் முழு அதிகாரத்தையும் தாம் பயன்படுத்துவதற்கு தம்மை அனுமதிக்கக் கோரி அவர் தேர்தல் ஆணையாளர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என அறிய வருகின்றது.
கட்சியின் மாற்றுத் தரப்பினர் (சம்பந்தன் குழுவினர்) தனி அணியாகச் செயற்படுகின்றனர் என்றும்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதால் தமது பிரிவை தமிழர் விடுதலைக் கூட்டணியாக அங்கீகரித்து "உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் அக் கடிதத்தில் கோரியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு கட்சி ஒன்று இரண்டுபட்டு நிற்கும் போது அவற்றில் ஒரு பிரிவை உண்மையான அக் கட்சியினை தேர்தல் ஆணையாளர் அங்கீகரித்து அத் தேர்தல் செயற்பாடுகளுக்கு உள்வாங்கிக் கொள்வாரானால் அத் தேர்தல் முடிவடைவதற்குள் நீதிமன்றுக்குச் சென்று தேர்தல் ஆணையாளாரின் அந்த முடிவை தடுத்து நிறுத்துவதற்கு சட்டத்தில் வழி இல்லை என விடயம் அறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காடுகின்றன.
அதாவது, ஆனந்தசங்கரியின் தற்போ தைய கடிதத்தின் அடிப்படைகளை ஏற்று, தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டு அணிகளாகப் பிரிவுபட்டிருக்கின்றது என்ற முடிவுக்குத் தேர்தல் ஆணையாளர் வந்து, அதன் அடிப்படையில் ஓர் அணியான சங்கரி குழவினரைத் தேர்தல் ஆணையாளர் உண்மையான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கட்சி என அங்கீகரிப்பாராயினால்
அதன் அடிப்படையில் ஆனந்தசங்கரி தரப்பினால் தாக்கல் செய்யப்படும் வேட்பாளர் பட்டியலை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட் டணி வேட்பாளராக ஏற்று அந்த அணிக்கு "உதய சூரியன்' சின்னத்தை வழங்க அவர் தீர்மானிப்பாளாரானால்
தற்போதைய மாகாணசபைகள் சட்டத் தின் கீழ் நீதிமன்றத்துக்குக் சென்றும் கூட அதனைத் தடுத்து நிறுத்த முடியாது என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின் றன.
எனினும், ஆனந்த சங்கரி இப்போது "உதய சூரியன்' சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி கோரி எழுதிய கடிதம் சம்பந்தமாக கட்சியின் பதிவு செய்யப்பட்ட செயலாளர் நாயகமான சம்பந்தரிடம் தேர் தல் ஆணையாளர் கருத்துக் கோரியிருக்கின்றார் என்று தெரிகிறது.
மகாணசபைத் தேர்தல் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும் கட்சி ஆராய்ந்து வருகின்றது என்றும்
தனிநபரான ஆனந்தசங்கரி காரண மாகக் கட்சி பிளவு பட்டு இரு அணிகளாக உள்ளது என்று கருதுவது தவறு என்றும்
தாமே தொடர்ந்தும் கட்சியின் செயலா ளர் நாயகம் என்பதால் வேறு யாரையும் அப்பதவியில் ஏற்று அங்கிகரிக்கக் கூடாது என்றும்
இரா.சம்பந்தன் தேர்தல் ஆணையாளருக்கு எழுதிய பதிலில் தெரிவித்திருக்கிறார் எனவும் அறிய வருகின்றது.
இவ் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையாளர் என்ன முடிவு செய்திருக் கின்றார் என்பது இன்னும் தெரியவர வில்லை.