வடமாகாண நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தும்பொருட்டு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு உட்பட வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக விசேட செயற்பாட்டுக் குழுவினை அமைக்கும் முகமாக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட விஷேட அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்றையதினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.
இதன்பிரகாரம் வடக்கு மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கபபட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அந்நடவடிக்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டு வட மாகாண சபையினை உருவாக்கும் வரை இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கான விசேட செயற்பாட்டுக் குழு நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை தலைவராகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ஷ ஆகியோரை உறுப்பினர்களாக உள்ளடக்கிய நிர்வாகக் குழுவினால் வழிநடத்தப்படுமென்பதுடன் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கை நிலமையினை கட்டியெழுப்புவதற்காக சுகாதார சேவைகள் குடிநீர் நீர்ப்பாசனம் மின்சாரம் தொலைத்தொடர்புகள் பெருந்தெருக்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பாடசாலைக் கல்வியினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியினை வழங்குவதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது விவசாயம் கால்நடைகள் மற்றும் மீன்பிடி தொழில் துறைகளை அபிவிருத்தி செய்வது போன்ற மகிந்த சிந்தனையில் குறிப்பிட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை இம்மாவட்டங்களில் மேற்கொள்ளும் என தெரியவருகின்றது.
மேலும் இந்நிர்வாகக் குழவானது அனைத்து அரச அமைச்சுக்கள் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் மூலம் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல் பொதுமக்களை மீள்குடியேற்றுதல் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை சிறந்த ஒருங்கிணைப்புடன் மேற்கொள்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல் என்பவற்றுடன் நிறைவேற்றாளர் மற்றும் சர்வகட்சி பிரதிநிதிகளது குழுவின் மூலம் பரிந்துரைக்கப்படுகின்ற ஆலோசனைச் சபை போன்ற நிறுவனங்களுக்கிடையே தகுந்த ஒருங்கிணைப்பினை உருவாக்குவதுடன் தேவையான சந்தர்ப்பங்களின் போது வடமாகாண ஆளுநருக்கு திட்டங்களையும் கருத்துக்களையும் இந்நிர்வாகக்குழு முன்வைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.