சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழு உறுப்பினர் டேவிட் சவேஜ் புலிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழு குறித்து அண்மைக்காலமாக அரசாங்கம் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.
திவயின நாளேட்டின் செய்தி ஆசிரியர் கீர்த்தி வர்ணகுலசூரியவினால் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள நியமிக்கப்பட்ட சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழுவைச் சேர்ந்த டேவிட் செவேஜ் என்பவர் ஜெனிவாவில் வைத்து விடுதலைப் புலி உறுப்பினர்களை சந்தித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளரும் முன்னாள் மதகுருவுமான இமானுவெல் என்பவருடன் டேவிட் செவேஜ் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவைச் சேர்ந்த டேவிட் செவேஜ் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தாம் நேரில் கண்டதாக லண்டன் சிங்கள அமைப்பின் தலைவர் டக்ளஸ் விக்ரமரத்ன ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக வினவியபோது தாம் ஒரு அவுஸ்திரேலிய பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் தமது வேலைகளில் தலையிட வேண்டாம் எனவும் டேவிட் செவேஜ் அச்சுறுத்தியதாக விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வதேச முக்கியஸ்தர்கள் குழு உறுப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய இமானுவெல் என்பவர் ஜேர்மனிய புலிகள் வலையமைப்பின் பிரசாரத் தலைவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.