மாகாணசபைத் தோதல்களின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுப் பெற்றுக்கொடுக்க எவரேனும் முயற்சித்தால் அதுவொரு முட்டாள்தனமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுப் பெற்றுக்கொடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினை தொடர்பாக இந்த அரசாங்கத்திடம் எவ்வித தீர்வுகளும் இல்லை எனவும் யுத்தத்தை மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மீறப்பட்டு ஒரு குடும்பத்தை மட்டும் போஷிக்கும் நிலைமையே இன்று நாட்டில் காணப்படுகிறது என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு குடும்பத்தின் அதிகாரமே இந்த நாட்டில் தற்போது நிலவுகிறது இது பற்றி விமர்சிக்க எவரும் முன்வருவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு சவால்கள் இருந்த போதிலும் இந்த சர்வாதிகார பயணத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த விசேட செவ்வியின் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
அதிகாரப்பகிர்வின் மூலமே தேசிப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் இது நாட்டை பிளவுபடுத்தும் சதித்திட்டமல்ல என அவர் குறிப்பிட்டார். இலங்கையை கட்டியெழுப்ப முஸ்லிம் மக்கள் தமது ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கிவருகின்றனர். எனினும் ஏனைய இனங்களைப் போன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.