ஜனாதிபதி ராஜபக்ஸவின் அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவும் தமிழர்களின் பிரச்சினையை மூடிமறைப்பதற்காகவுமே வடக்குக்கு விசேட செயலணிக்குழுவை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,
‘வடக்கு செயலணி மகிந்தவின் மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த உதவியாக நிறுவப்பட்டுள்ளது.இக்குழுவின் செயற்பாட்டினால் தமிழர்களுக்கு பயன் ஏதும் கிட்டப்போவதில்லை.
யுத்த நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் தமிழர் பிரச்சினையை மூடிமறைக்கவுமே இச்செயலணி குழு உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு செயலணி குழு மூலம் இங்கு இனப்பிரச்சினை இல்லையென்ற மோசமான நிலைப்பாட்டை சதி நடந்தேறுகின்றது.இதனைக்கண்டு ஏமாறுவதற்கு தமிழ் சமூகம் தயாரில்லை.’
இதேவேளை கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,
‘இத்தேர்தலானது ஒட்டு சமூகத்தின் விருப்பங்களுக்கு எதிராகவே இடம்பெறுகின்றது.எனவே இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலை புறக்கணிக்கின்றது.
வடகிழக்கு மாகாணத்தை பிரித்துள்ளதன் மூலம் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயன்ற அரசு,தற்போது மாகாணசபை தேர்தலை நடத்துவதன்மூலம் தமிழர் தாயக கோட்பாட்டை சிதைவடைய செய்கிறது.
தேர்தல் மூலமாக சமூகங்களை மோதவிட்டு தமிழர் தாயகத்தில் தமிழர் பலத்தை குறைக்கும் நாசகார நடவடிக்கையே முனைப்பு பெற்றுள்ளது’என்றார்.
இத்தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தால் வாக்குகள் சூரையாடப்படக்கூடிய நிலையுள்ளதே எனக்கேட்டதற்கு,
மிக விரைவில் கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண மக்களை தெளிவுறுத்து அறிக்கையொன்றை வெளியிடும்.
எனினும் கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தையும் அதனோடிணைந்த சக்திகளையும் தோற்கடிக்கும் அணுகுமுறையே அவசியம் எனவும் இவ்வலியுறுத்தலே கூட்டமைப்பின் அழைப்பாக அமையுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.