வவுனியா மதவாச்சிக்கு இடையில் புகையிரத இணைப்பு சேவை நடத்தப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்தே இதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தற்போது கொழும்பிலிருந்து மதவாச்சி வரை புகையிரத சேவை நடத்தப்பட்டுவரும் நிலையில் வடபகுதி மக்களின் சிரமங்களை போக்கும் முகமாக வவுனியாவிற்கும் மதவாச்சிக்கும் இடையே புகையிரத இணைப்பு சேவை நடத்தப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை இன்றைய தினம் சமூக சேவைகள் அமைச்சரும் வட மாகாண விஷேட செயலணிக் குழுத் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் மேற்கொண்டுள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மதவாச்சி வரை புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதன் மூலம் வவுனியா மன்னார் மாவட்டங்கள் உள்ளிட்ட வட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். மதவாச்சி புகையிரத நிலையம் வரை வருவதற்காக போக்குவரத்து நெருக்கடிகளையும் வீண் செலவீனங்களையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இவ்விடயம் குறித்து ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரடியாகவும் ஈ.பி.டி.பி. வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களூடாகவும் பொதுமக்கள் தெரியப்படுத்தியிருந்ததுடன் வவுனியாவரை புகையிரத சேவையினை நீடித்துத் தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வவுனியாவிற்கும் மதவாச்சிக்கும் இடையே ரயில் இணைப்பு சேவை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்படவிருக்கும் வவுனியா, மதவாச்சி இடையேயான இப்புகையிரத சேவை மூலம் தென்பகுதி செல்லும் பயணிகள் பாதுகாப்பாகவும் தேவையற்ற செலவீனங்களையும் தவிர்த்து தமது பிரயாணத்தை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது