யாழ். மாநகர மேயராக இருமுறை பொறுப்பு வகித்த சின்னதம்பி நாகராஜா (வயது 77) நேற்று வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் காலமானார்.
தமிழ்த் தேசியப் பற்றாளராகவும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவுக் கருத்துத்தளத்தை அமெரிக்காவில் உருவாக்குவதில் தீவிர பங்காற்றியராகவும் சின்னதம்பி நாகராஜா செயலாற்றினார்.
1931 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் நாள் பிறந்த சின்னதம்பி நாகராஜா, யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.
அதன் பின்னர் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்புக்களை நிறைவு செய்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அவர் பெற்றார்.
இலங்கையின் வடக்கு - கிழக்கில் சட்டத்தரணியாக அவர் பணிபுரிந்தார்.
மாகாண அபிவிருத்தி சபையானது தமிழ்மக்களுக்குப் பயனற்றது எனக்கூறி அதன் பிரதித் தலைவர் பொறுப்பிலிருந்து 1982 ஆம் ஆண்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
1989 ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தினை இந்தியப் படை ஆக்கிரமித்த போது வன்னிப் பிரதேசத்துக்குள் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அலுவலகத்தில் தங்கியிருந்தார்.
அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளிலும் அரசியல் யாப்பு விவகாரங்களிலும் அவர் பங்களித்தார்.
1990-களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ நீதித்துறை மற்றும் தமிழீழ நீதித்துறையின் சட்டக்கல்லூரி ஆகியவற்றின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களுக்கு பாடங்களை அவர் கற்பித்து வந்தார்.
அதன் பின்னர் 1990-களின் இறுதியில் அமெரிக்காவின் நியூஜெர்சி நகருக்கு அவர் நிரந்தரமாக இடம்பெயர்ந்தார்.
நியூஜெர்சி நகரில் தமிழ்ச் செயற்பாட்டாளர்களை அவர் ஒருங்கிணைத்தார்.
2007 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், "நாங்கள் பயங்கரவாதிகளோ அல்லது தனிநாடு கோருபவர்களோ அல்ல. இழந்துவிட்ட எமது சுதந்திரத்தை மீட்கவே நாம் போராடுகின்றோம்" என்றும் தமிழர்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ உரிமை படைத்தவர்கள்" என்றும் தனது வரவேற்புரையில் அவர் கூறியிருந்தார்.
அவருக்கு மனைவி மற்றும் 5 பிள்ளைகள் உள்ளனர்.
சின்னத்தம்பி நாகராஜாவினது இறுதி நிகழ்வுகள் நாளை (10.05.08) அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் முற்பகல் 9:00 மணிக்கு நடைபெற உள்ளன.