ஈரான், சிரியா போன்ற நாடுகள் தொடர்பாக அமெரிக்க மற்றும் அனைத்துலக ஊடகங்களும் காட்டி வரும் அக்கறையுடன் ஒப்பிடும் இடத்து, இலங்கை விவகாரத்தில் மிகவும் மெத்தனமான போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படையான உண்மை என்று கனடிய ஏடான "த ஸ்ரார்" தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
"த ஸ்ரார்" ஏட்டின் தலையங்கம்:
சிறிலங்கா தலைநகர் கொழும்பு போர் தொடர்பான சுவரொட்டிகளால் சூழ்ந்து காணப்படுகின்றது.
இலங்கை வரைபடம் ஒன்றில் "நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றீர்களா? நீங்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் உங்களின் கிராமமும், நாடும் பாதுகாக்கப்படும்" என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை காணக்கூடியதாக உள்ளது.
இராணுவம் முன்னேறி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. வெற்றிபெற முடியாத போர் ஒன்றில்லை என ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வளவு இழப்புக்கள் நேர்ந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என சூளுரைக்கப்படுகின்றது.
இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் போராட்டம் நடத்தி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் முன்நகர்வுகளை முடுக்கிவிட்டுள்ளன.
எனினும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையில் கடந்த 25 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக சுமார் 70,000 மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், லட்சக்கணக்கான தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கனடா உள்ளிட்ட பல நாடுகளிலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் வியாபித்துள்ளனர்.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும், அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஸ்சிற்கும் இடையில் போர் பயங்கரவாதம் தொடர்பான ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
"எம்முடன் இணைந்து செயற்படப் போகின்றீர்களா அல்லது எதிராகச் செயற்படப் போகின்றீர்களா?" என்பதே கொழும்பு அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாக தெரிவிக்கப்படுகின்றது.
போர் முன்னெடுப்புக்களின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் நேர்மை குறித்து பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் போர் முன்னரங்கப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடுமையான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவாகின்ற போதிலும் இதுவரையில் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கடந்த வருடத்தில் இலங்கையில் காணாமல் போனோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து காணப்படுவதாகவும், வேறு எந்த நாட்டிலும் இவ்வாறானதொரு நிலைமை காணப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
படுகொலைகள் மற்றும் கப்பம் பெறுவதனை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் என்பவற்றுடன் அரசாங்கத்திற்கும், துணை இராணுவப் படையினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட தரப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும், தமிழர் பிரதேசங்களுக்கு செல்லும் படைத்தரப்பினர் மிக மோசமான வகையில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
எனினும், இந்த நிலைமைகள் குறித்து இதுவரையில் அனைத்துலக சமூகம் உரிய முனைப்பு காட்டியதாக தென்படவில்லை.
ஈரான், சிரியா போன்ற நாடுகள் தொடர்பாக அமெரிக்க மற்றும் அனைத்துலக ஊடகங்களும் காட்டி வரும் அக்கறையுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை விவகாரத்தில் மிகவும் மெத்தனமான போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படையான உண்மை.
இலங்கையில் நடைபெற்று வரும் போரின் விளைவுகள் உலகம் முழுவதும் பரவி வியாபித்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையின் இனப்பிரச்சினையின் அழுத்தமான அதிர்வுகளை உணரக்கூடியதாக உள்ளது.
இலங்கையின் எந்தப் பகுதியிலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் இன அடக்குமுறை அரங்கேற்றப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அநேகமான தமிழர்கள் இந்தியா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். இந்த நிலைமை குறித்து அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்துவதாக தென்படவில்லை.
இந்த அரசாங்கம் தமிழர்களை கைது செய்து விசாரித்து வருவதாகவும் மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கனடிய தூதுவர் அன்சலா பொக்டனிடம் தெரிவித்துள்ளார்.
"நான் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன், குண்டு வெடிப்புக்கள் இடம்பெறக்கூடாது என்பதே எனது அபிப்பிராயம்" என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பயங்கரவாதச் செயல்களை காரணம் காட்டி பெருந்திரளான தமிழர்கள் கைது செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் கனடிய தூதுவரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நோர்வே அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் சமாதான முன்னெடுப்புகளை மீளத் தொடரக்கூடிய எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை.
இந்த சமாதான முன்னெடுப்புக்களுக்கு கனடிய அரசாங்கமும் ஆதரவு வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை தீர்த்துக் கட்டுவதில் அரசாங்கம் அதிக முனைப்புக்காட்டி வருகின்றது. இதற்கு முன்னரும் இவ்வாறான முயற்சிகள் தோல்வியில் முடிவுற்றன.
எனினும், இந்த அரசாங்கம் அதிக வளங்களைத் திரட்டி போர் முன்னெடுப்புக்களில் அதிக அக்கறை காட்டி வருகின்றது.
வட போர்க்கள முனையில் இராணுவத்தினரது முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய சாத்தியம் இல்லை என பிரசல்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
மனிதாபிமான உதவிகளின் தேவை பல்கிப் பெருகியுள்ளதாகவும், இரு தரப்பினராலும் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் மேற்கொண்டு வருவதாகவும் குறித்த அனைத்துலக அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
சமாதானம் குறித்த முனைப்பு இரு தரப்பினரிடமிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுள்ளதாகவே கருதுகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.