மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகரச் சிந்தனைகளோடு மாணவர்கள் உருவாக வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த புதன்கிழமை (07.05.08) நடைபெற்ற தமிழீழ மாணவர் அமைப்பின் வெளியீடான "கடுகு" மாத சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் அவர் பேசியதாவது:
இன்று மகிழ்ச்சியான நாள். இந்தப் போர்க்காலச் சூழ்நிலையில் தான் எமது மாணவர்களின் நலன் கருதி எமது மாணவர்கள் சமூகத்தின் எதிர்கால நலன் கருதி "கடுகு" என்னும் சஞ்சிகை வெளியிடுவது மாணவர்களாகிய உங்களுக்கு பெரிய பயனாக இருக்கும்.
இன்று சிறிலங்கா அரசு, எமது தாயகப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற எமது மாணவர்களுக்கான வளங்களை அனுப்புவதில் பல தடைகளைப் போட்டு வருகின்றது.
மாணவர்களுக்குத் தேவையான பாடசாலைப் பொருட்கள் வருவதற்கு தடை உள்ளது.
அறிவியல் ரீதியாக தொழில்நுட்பக் கருவிகளையும் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசு தடை விதித்துள்ளது.
எமது இனத்தின் பலமான சக்தி வாய்ந்த இந்த மாணவர் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பல தடைகளைப் போடுவது மட்டுமல்ல- எமது எல்லைகளில் இருந்து வடக்கே வட போர்முனையிலும் தெற்கே மன்னார்- மணலாறு- வவுனியா போன்ற களமுனைகளில் இருந்து எதிரியானவன் எமது மண்ணை நோக்கி முன்னேற முயற்சிக்கின்றான்.
சிங்களப் பேரினவாதம் தமிழினத்தை நோக்கி துப்பாக்கிகளை நீட்டியவாறு உள்ளது.
ஜம்பது ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கொண்டால் சிங்களப் பேரினவாத அரசு குறிப்பாக எமது இனத்தை அழிக்கவேண்டும் என்பதில் அதிலும் குறிப்பாக எமது மாணவச் செல்வங்களை அழிக்கவேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றது.
ஒரு நீண்டகால செயற்திட்டத்தில் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்று சிங்கள அரசு செயற்பட்டு வருகின்றது.
இது எமக்கு வரலாறு கற்றுத்தரும் பாடமாக உள்ளது.
வரலாறு கற்றுத்தரும் பாடங்களை நாம் கற்க வேண்டும்.
வரலாறு கற்றுத்தருகின்ற பாடத்தை நாம் கற்கத் தவறுவேமாயானால் நாம் அழிக்கப்படுவோம்.
வரலாறு ஊடாகத்தான் எமது விடுதலைப் போராட்டம் உருவாக்கம் பெற்று இன்று பெரிய தேசிய விடுதலைப் போராட்டமாக பரிணாமங்களைப் பெற்றுள்ளது.
தொடக்கத்தில் எமது கல்வி மீதுதான் சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.