பீரளு ரேந்தை பின்னுதல் இலங்கையின் தென்கரையோரப் பிரதேசத்தில் பல நூற்றாண்டு காலமாகப் பேணப்பட்டுவரும் ஒரு பாரம்பரியக் கலையாகும். ஒல்லாந்தரின் குடியேற்ற ஆட்சி நிலவிய 15ஆம் நூற்றாண்டில் அறிமுகமான இக் கலைவடிவம், பரம்பரை பரம்பரையாக தென்பகுதிக் கிராமியப் பெண்களின் வருமான வழிகளில் ஒன்றாக விளங்கியது. எனினும், 2004 டிசெம்பரில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் இக் கலைத்தொழில் சீரழிந்தது. பல பாரம்பரியக் கலைஞர்கள் உயிரிழந்தனர். அநேகமானோர் வேறு வழிகளில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் அழிந்துபோயின. இதனால், ஒருகாலத்தில் சிறப்புற்று விளங்கிய இக் கைப்பணிக் கலை முற்றாகவே ஒழிந்துபோகும் நிலையை எதிர்நோக்கியது.
இக் கலைத்தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பதற்கான முதலாவது நடவடிக்கையாக 2006ஆம் ஆண்டில் “பரம்பராவென்” என்ற பெயரிரில் பீரளு பின்னல் வேலைப்பாடுகளின் கவர்ச்சியான கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் பிரமுகர்களை மட்டுமன்றி, பிரதான தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் கவர்ந்த இக் கண்காட்சி, பீரளு பின்னல் தொழிலை மீண்டும் முன்னணிக்குக் கொண்டுவர உந்துசக்தியாக அமைந்தது.
HSB ஸ்ரீலங்கா-தெற்காசிய பங்காளித்துவ அமைப்பும் (SAPSRI) இணைந்து 2008 ஏப்பிரல் 8ஆம் திகதி தரு விலாஸ் - பார்க் வீதி ஹொட்டேலில் நடத்திய இரண்டாவது “பரம்பராவென்” கண்காட்சியில் நவீன பாணியிலான கலைவடிவங்களுடன் புத்தாண்டிற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட பீரளு ரேந்தை வேலைப்பாடுகளும் வைக்கப்பட்டிருந்தன.
ரேந்தை ஆடைகளை அவர்கள் நியாயமான விலைகளில் கொள்வனவு செய்தனர். பீரளு பின்னல் வேலைப்பாடுகளுடன் தனித்துவமாக உருவாக்கப்பட்ட 120 சேர்ட்கள், சாரம்கள் மற்றும் சேலைகள் இக் கண்காட்சியில் விசேட கவனத்தை ஈர்த்தன. கண்காட்சிக்கு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தவர்கள் இந்த பீரளு வேலைப்பாடு கொண்ட சேர்ட்களை அணிந்திருந்தமை ஒரு சிறப்பு அம்சமாகும். பார்வையாளர்களில் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்ப நம் அனைவருக்கும் உந்துசக்தியாக விளங்கும் SAPSRI, HSBC என்பவற்றையும் மிரிஸ்ஸ ரேந்தைக் கலைஞர்களையும் நாம் பாராட்டுகிறோம். இயற்கையோடிணைந்த எளிமையான வாழ்க்கையை நடத்தும் கலைஞர்களின்; கைவண்ணத்தைப் பிரதிபலிக்கும் இந்த ரேந்தைகள் பெறுமதி வாய்ந்தவை. அனர்த்தத்தினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்ட இக் கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இக் கண்காட்சியின் குறிக்கோள் வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.
பீரளு பின்னல் முறையில் கைகளினால் உருவாக்கப்பட்ட ஆண்களுக்கான சேர்ட் இக் கண்காட்சியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட விசேட ஆடைகளுள் இதுவும் ஒன்றாகும். படுக்கை விரிப்புக்கள், திரைச்சீலைகள் அல்லது பெண்களின் பாரம்பரிய உடைகளுக்கு மட்டுமே வழமையாகப் பயன்படுத்தப்பட்ட பீரளு வேலைப்பாடுகளை அன்றாட உடைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சேர்ட்கள், சாரம்கள் மற்றும் கண்ணைப் பறிக்கும் அழகிய சரிகைகள் கொண்ட சேலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. புத்தாண்டிற்கென கைத்தறி நெசவுத் துணிகளில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த உடைகளில் பீக்கொக் நீலம், எமரல்ட் பச்சை, வெள்ளை, மரூன், கபில ஒரேஞ்ச், மஸ்டர்ட், பெய்ஜ், கபிலச் சிவப்பு போன்ற பல்வேறு வர்ணங்களிலான பீரளு வேலைப்பாடுகள் இணைக்கப்பட்டிருந்தன.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மிரிஸ்ஸ பீரளு ரேந்தைக் கலைஞர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வே இக் கண்காட்சியாகும். மிரிஸ்ஸ பெண்களின் வெற்றிவிழாவாக அமைந்த இவ் வேலைத்திட்டம், பீரளு ரேந்தை பின்னும் கலைக்குப் புத்துயிரளிப்பதற்கும் உதவியுள்ளது. இக் கைப்பணிக் கலைக்கு இப்பொழுது புதிய கண்ணோட்டம் வழங்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள பெண் தொழில் முயற்சியாளர்கள் புதிய வியாபார வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர். HSBC பொது அலுவல்கள் முகாமையாளர் திருமதி ஷிரோமா டி. ஜயவிக்கிரம தகவல் தருகையில், “மிரிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 200 பீரளு ரேந்தை கலைஞர்களினதும் வேறு வழிகளில் இத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட சுமார் 400 பேரினதும் வருமான மட்டத்தை உயர்த்துவதற்கு இவ் வேலைத்திட்டம் உதவியுள்ளது” என்று கூறினார்.