2006ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் காரணாமக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிவந்த உறவில் துரதிஷ்டவசமாக சற்று விரிசல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பெர்னாட் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மிக மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்றதொரு மோசமான பயங்கரவாத அமைப்புடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தவிர்க்கப்பட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பூரணமான ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளின் யுத்த முன்னநகர்வுகளை அணுக முடியாத நிலை உருவாகியுள்ளதாக பெர்னாட் குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்பது தலைகளைக் கொண்ட கொடிய மிருகத்திற்கு நிகரானதென அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பெர்னாட் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
கிரேக்க புராணங்களில் சித்தரிக்கப்படும் ஒரு தலையைக் கொய்தவுடன் இன்னும் இரு தலைகள் உருவாகி நாச வேலைகளில் ஈடுபடும் பயங்கர கொடிய மிருகத்திற்கு ஒப்பானதே விடுதலைப் புலிகள் அமைப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் அலஸ்கா மாநில தலைநகரான ஜனநாவில் நடைபெற்ற உலக விவகார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை வெறுமனே ஓர் பயங்கரவாத அமைப்பாக கருத முடியாது எனவும் உலகின் மிகக் கொடிய தீவிரவாத இயக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அரசாங்கத்தினால் தடை செய்யப்படும் வரையில்ää தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் அறப்பணிகளுக்காக திரட்டப்படும் நிதி விடுதலைப் புலிகளின் யுத்த முன்நகர்வுகளுக்காகவே பயன்படுத்தப்படுவதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக தமிழர் கழகம் மற்றும் உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களும் அமெரிக்காää கனடா மற்றும் மேற்குலக நாடுகளில் நிதி திரட்டி புலிகளின் யுத்த நடவடிக்கைகளை போஷிப்பதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான அமைப்புக்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் விழிப்புணர்வுடன் செயற்படுகின்றமையினால் விடுதலைப் புலிகள் புதிய இயக்கங்களை உருவாக்கி அதன் மூலம் நிதி திரட்டலில் ஈடுபடுகின்றனர்.
பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற்பாடுகள் குறித்து கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டதுடன் வைட் பிஜன் அமைப்பின் மூலம் நிதி திரட்டல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பின்னர் வேறும் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமக்கு எதிராக செயற்படும் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை படுகொலை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்ää முன்னாள் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரை இதற்கு மேற்கோளாக காட்டலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் கொள்கைகளை சில வேளைகளில் ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் அவர்களினால் மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.