இலங்கையில் கடும் மனித உரிமைமீறல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து ஆணையாளா ஒருவரை விலக்குமாறு இலங்கை இராணுவம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆணையாளரான கலாநிதி டி நேசையா மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாக இராணுவத்தரப்பில் ஆணைக்குழுவின் முன்னால் ஆஜரான சட்டத்தரணி கோமின் தயாசிறி இன்று தெரிவித்தார். கலாநிதி நேசையா மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தின் சார்பில் பல இனத்துவ நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக கோமின் தயாசிறி சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் சுயாதீனத்துவம் பாதிக்கப்படு;ம் என அவர் வாதிட்டுள்ளார் எனினும் ஆணைக்குழுவில் இருந்து ஒரு உறுப்பினரை விலக்குவதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் இளைப்பாறிய நீதிபதி நிசங்க உடல்லகம குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியே அதற்கான அதிகாரத்தை கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தாம் முடிவெடுக்கவுள்ளதாக இராணுவ தரப்பு சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். திருகோணமலை மூதூரில் 17 தன்னார்வு பணியாளர்கள் கொல்லப்பட்டமை உட்பட்ட சம்பவங்களை விசாரணை செய்யவென இந்த ஆணைக்குழு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ளது