கிழக்கு தேர்தலில் மகிந்த அரசாங்கமானது "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகளை மேற்கொண்டது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேட்டில் சிறிலங்காவின் சமாதானப் பேரவைத் தலைவர் ஜெகான் பெரேரா எழுதிய கட்டுரையில் சாடியுள்ளார்.
அதன் தமிழாக்கம்:
கிழக்கில் நடைபெற்று முடிந்த தேர்தல்களின் போது சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடங்கியது முதல் தேர்தல் நடைபெற்ற நாள் வரை சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தேர்தல் நாளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஒன்று நியாயமானதும், சுதந்திரமானதுமாக நடைபெற்றது என்ற முடிவிற்கு வர முடியாது.
வேட்பாளர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலேயே பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், அதனை சுதந்திரமான ஜனநாயகத் தேர்தலாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் நிலவுகின்றது.
குறிப்பாக பிள்ளையான் குழுவினரின் ஆயுதச் செயற்பாடுகள், ஆயுதம் தரித்த குழு ஒன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தியமையினால் அதனை சுதந்திரமான தேர்தலாகக் கருத முடியாது.
தேர்தலில் போட்டியிடும் கட்சி ஒன்று ஆயுதங்களின் மூலம் வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்தால் அதனை ஜனநாயக முறைமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
உண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சி அரசாங்கத்தின் ஓர் கூட்டணி கட்சியாகவே தேர்தல் களத்தில் குதித்திருந்தது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கபபட்டதாக அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் பல முறைப்பாடுகளை செய்துள்ளன.
அநேகமான முறைப்பாடுகள் பிள்ளையான் குழுவினரினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களாகவே அமைந்துள்ளன. கிழக்கின் சில பகுதிகளில் சிறு கட்சிகளுக்கு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் காலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து பவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
"கிழக்கு மாகாணம் முழுவதும் பீதி பரவியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான நிலைமை காணப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்டெடுக்கும் பணியில் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான் குழுவினர் பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் அழுத்தங்களை கிழக்கில் பிரயோகித்து வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் புதிய அபிவிருத்தி திட்டங்களை தொடங்குவதன் மூலம் அரசாங்கம் மக்களை தம்வசப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. தேர்தல் விதிகளின்படி புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தல் காலத்தில் தொடங்கப்படக் கூடாது.
கிழக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரசாங்கம் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை தொடங்கியது.
மேலும் அரசாங்க ஊடகங்கள் மிக மோசமான வகையில் பிரசார நடவடிக்கைகளுக்கு ஒரு தலைப்பட்சமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் கிழக்கில் தங்கியிருந்து மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கைகளினால் காவல்துறை மற்றும் அரச அதிகாரிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. சில வாக்களிப்பு நிலையங்களில் தமது பிரதிநிதிகளை நிறுத்துவதற்குக் கூட சில கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என பவ்ரல் அமைப்பு தனது கண்காணிப்பு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களையும், அரசியல்வாதிகளையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் தோழமைக் கட்சியான பிள்ளையான் குழுவினரின் செயற்பாடுகளினால் படையினருக்கு தமது கடமைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
தேர்தல் நாள் அன்று இடம்பெற்ற அநேகமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பிள்ளையான் குழு மீதே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் நேரடியாக கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல இரண்டாவது ஏதுவாக அமைந்திருந்தது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அரசாங்கம் மிக மோசமான வகையில் அரச சொத்துக்களையும், உடமைகளையும் முறைகேடாக பயன்படுத்தியது தேர்தல் வெற்றிக்கு ஏதுவான மற்றுமொரு பிரதான காரணியாக நோக்கப்படுகின்றது.
அரசாங்க வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச சொத்துக்கள் மிக மோசமான வகையில் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பன்படுத்தப்பட்டன. தேர்தல் காலப்பகுதியில் அமைச்சர்கள் பல்வேறு பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து கிழக்கு மக்களை திசை திருப்பும் பணிகளில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் இந்தத் தேர்தல் தந்திரோபாயம் சற்று விலை உயர்ந்ததாக அமைந்திருந்த போதிலும், அவர்கள் எதிர்பார்த்த விளைவை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.