சிறிலங்கா கடற்படை மீது எந்த நேரத்திலும் எதிர்பாராத திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள் கடற்புலிகள் என்று இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கொமோடோர் வாசன் தெரிவித்துள்ளார்.
தென் ஆசிய ஆய்வு இணையத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:
2008 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் அதிகாலை 2:00 மணியளவில் திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினரின் வழங்கல் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
அது இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்றதாகத் தெரியவருகிறது.
சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 2003 ஆம் ஆண்டு அக்கப்பல் அரசுடமையாக்கப்பட்டது.
38 வருட பழமையான அக்கப்பல் இராணுவத் தளவாடங்கள் மற்றும் படையினருக்கு தேவையான பொருட்களை ஏற்றிச்செல்லும் ஓர் வழங்கல் கப்பலாக செயற்பட்டது.
"இன்விசிபிள்" என்ற பெயருடைய அக்கப்பல், கடற்புலிகளின் கண்களுக்கு மட்டும் மிகத் துல்லியமாக தென்பட்டுள்ளது.
கப்பல் ஒன்றை நீருக்கு அடியிலிருந்து தாக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.
முதலாவது
நீருக்கு அடியில் கப்பலின் ஏதாவது ஒரு பாகத்தை பற்றிப் பிடித்து அதன் பின்னர் வெடிக்கச் செய்தல். நீருக்கு அடியில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் தாக்குதல் எப்போதுமே மிகவும் ஆபத்தானது. தாக்குதல் நிகழ்ந்து 13 நிமிடங்களுக்குள் கப்பல் முற்றாக நீரில் மூழ்கியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
இரண்டாவது முறை
சக்தி வாய்ந்த குண்டை நீருக்கு அடியில் சென்று கப்பலின் குறித்த பாகத்தில் பொருத்திவிட்டு நேரக்கணிப்பான் மூலமாகவோ அல்லது அழுத்தம் மூலமாகவோ வெடிக்கச் செய்ய முடியும். இந்த சந்தர்ப்பத்தில் தாக்குதலை மேற்கொள்பவர் தாக்குதல் நடத்தப்படும் இடத்தை விட்டு அப்பால் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனினும் கடற்புலி போராளி எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிரிக்கு வழங்காது நேரடியாக தற்கொலைக் குண்டுத் தாக்குதலையே தெரிவு செய்து கப்பலை மூழ்கடித்துள்ளார்.
இத்தகைய ஆழ்கடல் தாக்குதல்களுக்கு திருகோணமலை கடற்பிரதேசம் ஓர் சாத்தியமான பிரதேசமாக காணப்படுகின்றது.
திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் இத்தகைய தாக்குதல்களை மிகவும் எளிதாக மேற்கொள்ள முடியும்.
1990களில் இப்பிரதேசத்தில் நான் கடமையாற்றியவன் என்ற வகையில் நான் இதனைக் கூறுகிறேன்.
ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்களை ஏற்றும் நடவடிக்கைளில் காட்டிய தீவிரம் காரணமாக கடற்புலி உறுப்பினர் பற்றி அவ்வளவு அவதானம் செலுத்தியதாக தெரியவில்லை.
மூன்றாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
குறிப்பாக மிகவும் உச்சளவு பாதுகாப்பு காணப்படும் நிலைகள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதனை மிகவும் உசிதமான போர்த் தந்திரோபாயமாக விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.
கடந்த மார்ச் 22 ஆம் நாள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதல் கப்பலுக்கு மேற்கொள்ளப்பட்ட அதே உத்திகளே இத்தாக்குதலின் போது கையாளப்பட்டுள்ளது.
ஆழ்கடல் தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கூடிய உரிய நிலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை அல்லது இவ்வாறான தாக்குதல்களை தடுப்பதற்கு போதுமான அளவு ஆற்றல் சிறிலங்கா கடற்படையினரிடம் காணப்படவில்லை என்பதே இதன் மூலம் புலனாகின்றது.
குறுகிய நேர இடைவெளியில் கப்பல்களில் கீழ்ப்பகுதியில் ஏதேனும் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றிய ஆராய சிறப்புச் சுழியோடிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
வள்ளங்களின் மூலம் குறித்த கடற்படை சுழியோடிகள் அடிக்கடி இச்செயன்முறையை மேற்கொள்கின்றனர்.
சிறிலங்கா கடற்படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்துள்ளனர். தற்போது மூழ்கடிக்கப்பட்ட குறித்த சிறிலங்காவின் வழங்கல் கப்பல், விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்களை தாக்கியழிக்க ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரியவருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பாரிய கப்பல் தாக்குதல் இதுவாகும்.
இதற்கு முன்னரும் கடற்புலிகளின் கங்கை அமரன் படைப்பிரிவினால் கப்பல் ஒன்று தாக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு மன்னாரில் கொல்லப்பட்ட கடற்புலிகளின் முக்கிய தலைவரின் பெயரே இப்பிரிவிற்கு சூட்டப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் எந்த நேரத்திலும் எதிர்பாராத திடீர் தாக்குதல்களை சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொள்ளக்கூடிய வல்லமை கொண்டவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த மட்டில் கடற்பகுதிகளில் தமது பலத்தை உறுதிப்படுத்திக்கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.
இத்தகைய தாக்குதல்கள் சிறிலங்கா அரச படைத்தரப்பின் மனோ வலிமையை வெகுவாக தாக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ முன்நகர்வுகளில் கிழக்கு கடற்கரை பிராந்தியத்திலிருந்தே ஆயுதங்கள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.
இத்தகைய பல தாக்குதல்கள் தமிழீழ விடுதலைப் புலிககளினால், கடற்படையினர் மீது நடத்தப்படக்கூடும் என அவர் தமது கட்டுரையில் எதிர்வுகூறியுள்ளார்.