மன்னாரில் இன்று அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலையடுத்து மன்னார் சவுத்பார் சிறிலங்காப் படை முகாமை அண்மித்துள்ள பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை 50-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 36 பேரைத் தொடர்ந்தும் தடுத்து வைக்கும்படி காவல்துறையினருக்கு படையினர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1:15 மணியளவில் மன்னார் தொலைத்தொடர்புக் கோபுரச் சந்தியில் அமைந்துள்ள படையினரின் காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சுமார் 15 நிமிடங்களாக அப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதலில் தமது தரப்பில் எவரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள படைத்தரப்பு, இன்று காலை 6:00 மணிமுதல் மன்னாரில் மிகப்பெரிய சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் சவுத்பார் படை முகாமை அண்மித்துள்ள பள்ளிமுனை மற்றும் நளவன்பாடி ஆகிய இடங்களையே படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.
தேடுதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் மன்னார் காவல்துறை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கைது செய்யப்படுபவர்கள் அனைவரையும் படையினர் படம் எடுத்து வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.