சிறிலங்காவின் பெயரை அனைத்துலக மட்டத்தில் தீர்மானிக்கப் போகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெறவுள்ளது.
47 பேர் கொண்ட மனித உரிமைகள் சபையில் 15 இடங்களுக்கான தேர்தலே நாளை நடைபெறவுள்ளது. இந்த 15 இடங்களில் ஆசியப் பிராந்தியத்துக்கான 4 இடங்களுக்கு ஆசியாவைச் சேர்ந்த 6 நாடுகள் போட்டியிடுகின்றன.
போட்டியில் களம் இறங்கியுள்ள சிறிலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், தென்கொரியா, கிழக்குத் தீமோர், பஹ்ரெய்ன் ஆகியவற்றில் பஹ்ரெய்னும் கிழக்குத் திமோரும் முதல் தடவையாக மனித உரிமைகள் சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடைமுறை
மனித உரிமைகள் சபைக்கான 47 ஆசனங்களில் ஆபிரிக்க மற்றும் ஆசியப் பிராந்தியங்களுக்கு தலா 13 ஆசனங்களும் கிழக்கு ஐரோப்பாவுக்கு 6 ஆசனங்களும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு 8 ஆசனங்களும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 7 ஆசனங்களுமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் ஒரு தடவை போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்நாடு 2 வருடங்களுக்கு பதவியில் இருக்கலாம். தனது பதவிக்காலத்தை அந்நாடு நீடிக்க விரும்பினால் மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெறவேண்டும்.
47 உறுப்பினர்களுக்கான இத்தேர்தல் 192 பேர் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடைபெறும்.
சாதாரண பெரும்பான்மையின் அடிப்படையிலேயே வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப்படும். அந்த வகையில், பொதுச் சபையில் இருந்து 97 வாக்குகள் பெற்றால் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
சிறிலங்காவின் நிலைமை
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மனித உரிமைகள் சபையில் உள்ள சிறிலங்காவின் பதவிக்காலம் முடிவடைவதால், அது தனது இருப்பை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு தேர்தலில் குதித்துள்ளது.
ஆனால் ஆட்கள் காணாமல் போதல், தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலைகள், ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் உட்பட பாரதூரமான மனித உரிமைகள் மீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்க அனுமதிக்கக்கூடாது. அதில் அங்கம் வகிக்க சிறிலங்காவுக்கு எந்த தகுதியும் கிடையாது.
மனித உரிமைகளைப் பேணும் முன்னுதாரான நாடுகளே இச்சபையில் அங்கம் வகிக்க வேண்டும் என சிறிலங்காவைச் சேர்ந்த 13 அரச சார்பற்ற அமைப்புக்கள் கடந்த ஏப்ரல் 28 மாதம் ஆம் நாள் ஐ.நா. பொதுச்சபைக்கு மனுவினை அனுப்பியிருந்தன.
அதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்றவர்களான அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் ஜிம்மி கார்ட்டர், ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்த அடல்போ பெரிஸ் மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டெஸ்மன்ட் டுட்டு ஆகியோரும் சிறிலங்கா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கக்கூடாது என்று கடுமையான அறிக்கைகளை விடுத்திருந்தனர்.
சிறிலங்காவின் கடுமையான மனித உரிமைகள் சம்பவங்கள் தொடர்பாக அதற்கு எதிராக கண்டன தீர்மானம் அண்மையில் மனித உரிமைகள் சபையில் கொண்டு வரப்பட்டபோது, அதனை ஆபிரிக்க நாடுகள் உட்பட தனது ஆதரவு நாடுகளின் உதவியுடன் விவாதத்துக்கு எடுக்காமலேயே சிறிலங்கா இழுத்தடித்து விட்டது.
மனித உரிமைகள் சபையில் தனக்குள்ள ஆதரவைக்கொண்டு இவ்வளவு காலமும் தனது காரியங்களை சாதித்திருப்பினும், தற்போது 192 உறுப்பினர்கள் கொண்ட பொதுச் சபையிலேயே சிறிலங்கா தேர்தலை சந்திக்கவுள்ளது.
வல்லரசுகள் உட்பட உலக அரசியலை தீர்மானிக்கும் சக்திகளின் வாக்குப் பலத்தை சிறிலங்கா எதிர்நோக்கி நிற்கின்றது.
சபை அமர்வு ஒன்றின் போது சிறிலங்கா மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டபோது, மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் சிறிலங்கா ஒரு முன்னுதாராணமான நாடு என்றும் எமக்கு ஒன்றும் இது விடயத்தில் பாடம் கற்பிக்க வேண்டாம் என்றும் இயலுமானால் வாக்களிப்பில் வென்று பாருங்கள் என்றும் சிறிலங்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் தயான் ஜெயதிலக்க சவால் விடுத்திருந்தார்.
இதற்கு எல்லாம் 27 நாடுகளைக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வாக்குகள் நாளை பதிலளிக்கவிருக்கின்றன.
இதேவேளை, அமெரிக்காவும் சிறிலங்கா நியமிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகள் சபையில் தனது இருப்பு ஈடாடுவதை உணர்ந்துகொண்ட சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் கடந்த சில மாதங்களாகவே, நாடு நாடாகச் சென்று தமது தெரிவுக்கான பிரசார சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் இந்தப் பிரசாரங்களில் விடுதலைப் புலிகளே சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் சம்பவங்களுக்கு எல்லாம் பொறுப்பு என்று வார்த்தைக்கு வார்த்தைக்கு இடித்துரைத்து வருவதாகவும் அவை மேலும் தெரிவித்தன.
வெற்றி பெற்ற அங்கத்துவர்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 8 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 2 முதல் ஜூன் மாதம் 20 வரை நடைபெறும்.