அனைத்துலகம் எத்தகைய தடைகளை விதித்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று சிறிலங்கா அமைச்சர் அனுரா பிரயதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் முன்பாக உள்ள பாரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்காது.
குறிப்பாக அனைத்துலக சமூகம் எத்தகைய தடைகளை விதித்தாலும் புலிகளுக்கு எதிரான எமது போர் தொடரும்.
இலங்கையில் உள்ள உள்ளுர் மற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் சிறிலங்கா அரசுக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்தன.
ஐக்கிய தேசியக் கட்சியும் இத்தகைய பிரசாரங்களை முன்னெடுத்தது. இவை அனைத்தும் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள்தான்.
தென்னாபிரிக்காவின் டெஸ்மன் டுட்டு, அமெரிக்காவின் ஜிம்மி காட்டர் ஆகியோர் சிறிலங்கா தொடர்பான பிழையான தகவல்களை கொடுத்துள்ளனர்.
இத்தகைய காரணங்களால் தான் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பிடிக்க சிறிலங்காவால் முடியவில்லை.
எனினும் சிறிலங்காவை 101 நாடுகள் ஆதரித்தள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பிடிக்க முடியாமல் போனதால் ஒன்றும் நடந்துவிடாது. அக்குழுவில் வாக்களிக்க முடியாமல் போகுமே தவிர எமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க முடியும்.
ஏதிர்வரும் காலங்களில் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் புதிய வியூகங்களை வகுக்க இருக்கின்றோம். இந்தப் புதிய வியூகங்களின் அடிப்படையில் செயற்பட்டு எமக்கான இடத்தைப் பிடிப்போம். விமர்சனங்களைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை.
ஆடை ஏற்றுமதிக்கான கோட்டா முறையை தக்கவைக்க அரசாங்கம் என்ற வகையில் எமக்கு முடியும். இதில் தேவையற்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க தலையிடத் தேவையில்லை. அவரை தலையிடுமாறு அரசாங்கம் கோரவும் இல்லை என்றார் அவர்.