பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்டெல்லா புரூஸ் இளமை ததும்பும் பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.இவர் 90களில் மிகப் பிரபலமான எழுத்தாளராக விளங்கியவர்.அனைத்து முன்னணி வார இதழ்களிலும் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.விகடனில் வெளிவந்த அவரது ' அது ஒரு கனாக்காலம் ' தொடர் நாவல் அப்போது வாசகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற ஒன்றாகும்.
67 வயதான ஸ்டெல்லா புரூஸின் இயற்பெயர் ராம் மோகன்.கோடம்போக்கம் யுனைட்டெட் இந்தியா காலனியில் தனது மனைவியுடன் அவர் வசித்து வந்தார்.சமீபத்தில்தான் ஸ்டெல்லா புரூஸின் மனைவி மரணமடைந்தார்.ஏற்கனவே வறுமையில் வாடிய ஸ்டெல்லா புரூஸூக்கு, மனைவியின் இழப்பு கூடுதல் துயரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை அவர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை அவரது வீட்டுக்கு வேலைக்காரப் பெண் வந்துள்ளார்.அவரது அறையை அவர் திறந்து பார்த்தபோது மின்விசிறியில் ஸ்டெல்லா புரூஸின் உயிரற்ற உடல் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்.இதனையடுத்து அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், மனைவியின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக எழுதி வைத்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தான் எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்தார்.அவரது இழப்பால் ஏற்பட்ட துயரத்திலிருந்து தமிழ் எழுத்தாளர் உலகம் மீள்வதற்குள், ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது