தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைப் பகுதிக்கு இலங்கை அகதிகள் 20 பேர் வந்தனர். இலங்கை வவுனியா பகுதியில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 7 குழந்தைகள், 7 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ஆகிய 20 பேர் நேற்று(03.02) தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைப் பகுதியில் படகு மூலம் வந்திறங்கினர்.
இலங்கை மன்னார் கடற்கரையில் இருந்து படகு கட்டணம் தலா ரூ. 10 ஆயிரம் செலுத்தி வந்துள்ள இவர்கள், இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
தனுஷ்கோடி காவல்துறை மற்றும் மத்திய, மாநில புலனாய்வுத் துறையினர் ஆகியோர் அகதிகளிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவர்களை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது, இலங்கை வவுனியா பகுதியில் இரவு நேரங்களில் ஒவ்வொரு வீடாகப் புகுந்து விடுதலைப் புலிகள் யாரும் இருக்கின்றனரா என ராணுவத்தினர் துன்புறுத்தி வருகின்றனர் என்றும், உணவுப் பொருள்களின் விலையும் அதிகமாக உள்ளதால், வேறு வழியின்றி இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோம் என்றும் அகதிகளில் ஒருவர் தெரிவித்தார்.