நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடல் படையினர் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒரு மீனவர் பலியானார்.
ராமேசுவரம் மீனவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று காலை 262 விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினத்தைச் சோந்த குயின்ராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் அக்காள்மடம் மீனவர் காலனியை சேர்ந்த கிறிஸ்டி(வயது 30), மற்றும் அந்தோணிராயப்பன்(31), மரியகுவிட்டன்(20) ஆகியோர் சென்றனர். இந்த படகுக்கு டிரைவராக மரியபிச்சை(42) இருந்தார்.
பகல் 12-30 மணி அளவில் இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கையில் இருந்து 3 சிறிய ரோந்து கப்பல் அதிவேகமாக வந்தது. அவை ஒவ்வொன்றிலும் சிங்கள கடற்படையினர் 6 பேர் இருந்தனர். அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்தனர்.
இதனால் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் அவசர அவசரமாக தங்கள் படகை ராமேசுவரம் நோக்கி திருப்பினார்கள். மரியபிச்சையும் தனது படகை கரைக்கு திருப்பிக்கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் அந்த படகை சிங்கள கடற்படையினர் சூழ்ந்து கொண்டனர். இதனால் பயந்துபோது அந்த படகில் இருந்த 4 மீனவர்களும் தங்கள் கையை மேலே தூக்கினார்கள். அவர்களிடம் சிங்கள வீரர்கள் ``அப்படியே அசையாமல் நில்லுங்கள் அசைந்தால்
சுட்டுவிடுவோம்'' என்று எச்சரித்தனர். சுமார் ஒரு மணிநேரம்
அப்படியே நிற்க வைத்தனர்.
குண்டு பாய்ந்தது
அதன் பின்னர் ``உங்கள் நாட்டை நோக்கிச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் அவர்கள் தங்கள் படகை திருப்பி வந்துகொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவர்களை நோக்கி சிங்கள கடற்படையினர் கண்
மூடித்தனமாக சரமாரியாக சுட்டனர். இதில் கிறிஸ்டியின் தலையின் பின்புறம் குண்டு ஒன்று பாய்ந்தது. அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். மற்றவர்கள் படகில் படுத்துக் கொண்டதால் குண்டு மழையில் இருந்து தப்பினார்கள். சுமார் 5 நிமிட நேரம் துப்பாக்கி சூடு நடத்தியபின் சிங்களபடையினர் திரும்பிச் சென்று விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கிறிஸ்டியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் படகை அதிவேகமாக கரைக்கு செலுத்தினர். வழியில் அவர்களின் படகு பழுதடைந்தது. அதை அவசரஅவசரமாக சரிசெய்து மண்டபம் வடக்கு துறைமுகத்துக்கு மாலை 5-30 மணிக்கு வந்து சேர்ந்தனர்.
பரிதாப சாவு
ரத்தவெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த கிறிஸ்டியை ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துபோனதாக தெரிவித்தனர்
சிங்கள கடற்படையினரின் துப்பாக்கி குண்டுக்கு மீனவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது, இதனால் மீனவர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
குடும்பம்
துப்பாக்கி குண்டுக்கு பலியான கிறிஸ்டியின் தந்தை பெயர் அந்தோணி பிச்சை. மனைவி பெயர் தர்மசீலி(27). இவர்களுக்கு ஸ்டீவ்வாக்(9), ஸ்டெடிவாக்(5) என்ற மகன்களும், ஸ்டெனி(7) என்ற மகளும் உள்ளனர்.
கிறிஸ்டி வாரம் இருமுறை மண்டபம் வடக்கு துறைமுகத்துக்கு வந்து மீன்பிடிக்க செல்வார். இவர் மட்டுமே உழைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவரது உடலை பார்த்து மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
நடந்த சம்பவம் பற்றி உடன் சென்ற மீனவர்கள் மரியபிச்சை, மரியகுவிட்டன் ஆகியோர் கூறியதாவது:-
இலங்கை கடல்படை சுட்டதில் கிறிஸ்டியின் பிடறியில் இடது
புறம் குண்டு பாய்ந்தது. அவரை காப்பாற்றுவதற்காக படகை வேகமாக ஓட்டினோம். ஆனால் விதி எங்களுடன் விளையாடியது. வழியில் படகு பழுதடைந்து விட்டது. அந்த பகுதியில் கடல் வெறிச்சோடி கிடந்ததால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. பழுதான படகை சரிசெய்ய 20 நிமிடம் ஆனது. மீண்டும் மின்னல் வேகத்தில் படகை செலுத்தி கரைக்கு வந்தோம். ஆனாலும் கிறிஸ்டியின் உயிர் பிரிந்து விட்டது.
இவ்வாறு கண்ணீர் மல்க அவர்கள் கூறினார்கள்.