சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் கைதான அனைவரையும் விடுதலை செய்ய முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் திருமுறைகளை ஓதி வழிபடும் பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி, உள்துறை செயலாளர், அறநிலையத்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோரை அழைத்து கலந்து ஆலோசித்தார்.
தற்போது, நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஓதுவதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத சூழ்நிலையில், இரு தரப்பினர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையிலே உள்ளவர்களை-சிறையிலிருந்து விடுவிக்குமாறு முதல்-அமைச்சர் கூறிய அறிவுரையின்பேரில், உடனடியாக அதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் கைது செய்யப்பட்ட 44 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவு நகல் சிதம்பரம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கொடுக்கப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு வசந்தி கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறை சூப்பிரண்டு முருகேசனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து ஓதுவார் ஆறுமுகசாமி உள்பட 33 பேரும், தீட்சிதர்கள் 11 பேரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். ஓதுவார் ஆறுமுகசாமியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் கடலூர் மத்திய சிறை முன் கூடினர்.
பின்னர் ஓதுவார் ஆறுமுகசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் தமிழில் தேவாரம் பாட மீண்டும் இன்று (வியாழக்கிழமை) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்கிறேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். தேவாரம், திருவாசகத்தை இன வேறுபாடுகளை களைந்து அனைவரும் பாட வேண்டும். தமிழ் மொழி வளர வேண்டும்.
இவ்வாறு ஓதுவார் ஆறுமுகசாமி கூறினார்.