உலக அளவில் பெரும்பான்மையான நாடுகளை எடுத்துக்கொண்டால், ஆண் - பெண் விகிதம் சமமாகவோ அல்லது ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவோ உள்ளது.
ஆனால் இந்த நிலை, இந்தியாவில் தலைகீழாக இருப்பது, அதாவது ஆண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வது மிகுந்த அபாயத்தை விளைவிப்பதாகவே உள்ளது.
கடந்த 2001-ன் கணக்கெடுப்பின்படி, 0-6 வயது வரையிலான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 1000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. இது பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பில் 945 : 1000 என்ற விகிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விகிதம் மேலும் குறைந்தவண்ணம் செல்வதால், மனித இன விருத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகுவதற்கு அடித்தளமாக அமைந்துவிடும். இந்த அபாயத்தை உணர்ந்து செயல்படுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
ஆண் - பெண் பாகுபாடு!
குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபராக கருதப்படுவதால், ஆண் குழந்தை பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாறாக, பெண் குழந்தை சுமையாகவே போற்றப்படுகிறது!
காரணம், குடும்ப கட்டமைப்பு, கலாச்சாரம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே. பெண் குழந்தையைப் புறக்கணிப்பதற்கு 'வரதட்சணை' என்ற முறையே முக்கியக் காரணமாக அமைகிறது.
தென் இந்தியாவைக் காட்டிலும் ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட இந்திய மாநிலங்களில் ஆண் குழந்தைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.
கல்வி அளிப்பதிலும் ஆண்களுக்கே பெருவாரியாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குடும்பத்தில் வருமானத்துக்கு ஆதராமாக திகழ்வதால் ஆண்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றோர்கள் ஏற்படுத்தித் தருகின்றனர். இந்நிலை, நகர்புறங்களில் சற்று...
மாற்றம் பெற்று வந்தாலும்கூட கிராமப்புறங்களில் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்தவண்ணமே உள்ளன.
தீர்வுகள்தான் என்னென்ன?
பெண்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் போன்றவற்றை அரசு மேற்கொண்டாலும், அதுமட்டுமே சமூக நிலையை அடியோடு மாற்றிவிடும் என்று எதிர்பார்க்க இயலாது.
ஒவ்வொரு தனி மனிதனும், சமூகமும் தங்களுக்குள் மனமாற்றத்தைக் கொண்டாலே இதற்கு முழு தீர்வு காண வழிவகை செய்யமுடியும்.
பெண்களுக்கு கல்வி அளிப்பதில் முன்னுரிமை, அனைத்து துறைகளிலும் பணிபுரிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல், வரதட்சனையை ஒழித்தல் போன்ற பொதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.
அதுதவிர, ஆண் - பெண் பாகுபாட்டை குடும்பத்திலேயே, அதுவும் குழந்தைப் பருவத்திலேயே பதிவு செய்வதை பெற்றோர்கள் விட்டொழிக்க வேண்டும். அதற்கான மனோபாவத்தில் நல்லதொரு மாற்றம் வேண்டியது அவசியம்.
ஊரகப் பகுதிகளில் மருத்துவ வசதிகள் சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மரணத்தை தடுக்க இயலும். இதில், அரசுக்கு மிகுதியான பங்குண்டு.
அத்துடன், பெண் சிசு கொலையை அறவே நிகழாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்புகள் நிகழாமல் கண்காணிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் காட்டிலும், பெண் குழந்தையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஒவ்வொரு பெற்றோருக்கும் வந்தால், இப்பிரச்சனைகள் காணாமால் போய்விடும் என்பது தெளிவு.
மார்ச் 8... சர்வதேச மகளிர் தினத்தை அனுசரித்துக் கொண்டாடும் இவ்வேளையில், பெண்களுக்கு சம உரிமை என்பன போன்றவற்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல், ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இன்றி இருப்பதன் அடிப்படை அவசியத்தை உணர்ந்து செயல்படுவதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.