கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 62 பேர் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் நேற்று கடத்திச் செல்லப்பட்டனர்.
62 மீனவர்கள் கடத்தல்
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 44 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தூத்தூர் அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தில் 5 மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பிறகு அந்த பகுதியைச் சேர்ந்த பல மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டு மீட்கப்பட்டனர். கடந்த வாரம் கூட தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்டு, அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறுநாள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 62 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று பிடித்துச் சென்று விட்டனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
6 படகுகள்
குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர் கிராமங்களில் இருந்து கடந்த 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 6 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பங்கள் கவலை அடைந்தன. மீனவர்கள் மாயமானது குறித்து விசாரிக்க பங்குத்தந்தைகளிடம் கேட்டுக்கொண்டனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில்...
இந்த நிலையில் மாயமான மீனவர்கள் அனைவரும் தூத்துக்குடி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
6 விசைப்படகுகளிலும் இருந்த 62 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
பரபரப்பு- சோகம்
6 படகுகளையும் சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்ததை பார்த்த இன்னொரு படகில் இருந்த மீனவர்கள் உடனே தூத்தூர் கிராம மீனவர் சங்கத்துக்கு நேற்று மாலை தகவல் கொடுத்தனர்.
62 மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அந்த மீனவர்களின் வீடுகளிலும், கிராமங்களிலும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. கடத்தப்பட்ட மீனவர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர். அந்த கிராமங்கள் சோகத்தில் மூழ்கின.
கலெக்டர் நடவடிக்கை
மீனவர்கள் கடத்தி செல்லப்பட்டது பற்றி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டம் தூத்தூரில் இருந்து 3 படகுகளில் 31 மீனவர்களும், சின்னத்துறையில் இருந்து 3 படகுகளில் 31 மீனவர்களும் ஆக மொத்தம் 62 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இலங்கை கடற்படையினர் 62 மீனவர்களையும் பிடித்து சென்று உள்ளனர். இதுபற்றிய தகவல் தூத்தூர் மீன் பிடி சங்கத்தினர் மூலம் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்திக்கு மாலை 5.30 மணிக்கு தெரியவந்தது.
அவர் என்னிடம் தெரிவித்தார். உடனே மீன்வளத்துறை ஆணையர் மூலமாக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற விவரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளேன். மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் ஜோதி நிர்மலா கூறினார்.