தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கன்னியாகுமரியில் கடலோர காவல் படை நிலையம் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முதல்வர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: கடந்த 5ஆம் தேதி கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், என்னையும், தமிழக மக்களையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்தியது, இலங்கை கடற்படை என்று தெரிய வந்துள்ளது. ஆனால், இலங்கை அரசு மறுத்துள்ளது.
நேற்று முன்தினம் கூட 62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களின் எதிரொலியாக, சட்டம்ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதை தடுக்க, தமிழக கடல் பகுதியில் கடற்படையும், கடலோர காவல் படையும் கண்காணிப்பை தீவிரப்படுத்த தாங்கள் உத்தரவிட வேண்டும்.
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி நான் எழுதிய கடிதத்தில் விடுத்திருந்த கோரிக்கைகளை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 01.கடலோர காவல் படை, கடற் படை ரோந்து கடலில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகமான படைபலத்துடன் வான் வழி ரோந்து தீவிரப்படுத்த வேண்டும்.
02.கிழக்கு, மேற்கு கடலோர பகுதிகளாக தற்போது பிரிந்து இருப்பது சில குழப்பங்களை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழகத்தின் கடற்பகுதி முழுவதையும் ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். 03.தூத்துக்குடியில் பிரத்தியேகமாக ஒரு ஹெலிகொப்டர் நிறுத்தி அதை, கடலோர காவல் படை கிழக்கு தளபதியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மாநில மீன்வளத் துறைக்கு தகவல் தொடர்பு மேம்பாட்டை பலப்படுத்த நிதி அளிக்க வேண்டும். கன்னியாகுமரியில் கடலோர காவல் படையின் நிலையத்தை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த கடலோர காவல் படையின் கட்டுப்பாட்டையும் கால தாமதமின்றி அதன் கீழ் கொண்டு வர வேண்டும்.
தற்போது அந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சகம் எனது ஆலோசனைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, இந்திய கடற்பகுதி மற்றும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கச்சதீவு அருகே அதிக அளவில் மீன் கிடைக்கும் என்பதாலும், தமிழக மீனவர்களின் மீன்பிடி களமாக அந்தப் பகுதி தொன்று தொட்டு இருப்பதாலும் அங்கு செல்கிறார்கள்.