பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டதை, பொலிஸார் மறைக்க முயன்றதாக, இந்தியாவின் கோவா மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிதும் கவனத்தை ஈர்த்த இந்த விடயத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கார்லெட் கீலிங் என்ற பெண் போதைப் பொருளை உட்கொண்டதை அடுத்து நீரில் மூழ்கியதாக ஆரம்பத்தில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அந்தப் பெண்ணின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக மறுவிசாரணை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளூர் நபர் ஒருவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ராய்ட்டர் செய்தி சேவைக்குக் கருத்து கூறிய கோவாவின் சுற்றுலாத்துறை அமைச்சர், இது ஒரு கொலை என்றும், இதனை பொலிஸார் மறைக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.