மதிமுக மாநிலங்களைவத் தேர்தல்களில் போட்டியிடாது என அறிவித்திருக்கிறது. கடந்த புதன்கிழமை அதன் கூட்டணிக் கட்சியான அஇஅதிமுகவின் சார்பாக முன்னாள் குடிசைமாற்று வாரியத் தலைவர் ந.பாலகங்கா வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேர்தல்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக இன்னொரு இடத்திற்காக போட்டியிடும் எனவும் அறிவித்திருந்தார்.
இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கட்சி நிர்வாகிகள் நீண்ட நேரம் தேர்தல்கள் பற்றி விவாதித்த பிறகு வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையில் கட்சி போட்டியிடப் போவதில்லை என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது அஇஅதிமுக - மதிமுக கூட்டணிக்குள்ள சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில், ஓர் இடத்தில் அது உறுதியாக வெற்றிபெற்றுவிடலாம்.
அந்த உறுதியான இடம் அதிமுகவின் பாலகங்கா என்ற நிலையில், நடிகர் விஜயகாந்த, மற்றும் தளி சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோரின் ஆதரவு இருந்தால்தான் அக்கூட்டணி இன்னொரு இடத்தில் வெல்லமுடியும்.
அப்படி கிடைக்குமா என்று உறுதியாகத் தெரியாதபோது, போட்டிபோட்டு தோற்க கட்சி விரும்பவில்லை என்பதாலேயே போட்டியிலிருந்து விலக மதிமுக முடிவெடுத்ததாக நம்பப்படுகிறது.
ஆனால் இந்த முடிவு ஜெயலலிதாவிற்கு அதிருப்தியை அளிக்கும், அது எந்த விதத்தில் கூட்டணியை பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றும் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவிருக்கிறதா என்பது குறித்து இன்னமும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே காங்கிரஸ் சார்பாக மத்திய இணை அமைச்சர் ஜீ.கே.வாசன் போட்டியிடுவார் என்று புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டிருக்கிறது